ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் 'நாகேஷ் திரையரங்கம்'!
திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்குகளை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் 'நாகேஷ் திரையரங்கம்' எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
இதில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள். முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மாடல் அழகி மாஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

நாகேஷ் திரையரங்கம் படத்தை எழுதி இயக்குகிறார் இசாக். இவர் அகடம் என்ற திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற முதல்தமிழ் இயக்குநர் என்பது குறிப்படத்தக்கது.
படத்தைப் பற்றி இசாக் கூறுகையில், "திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும் களமும் புதிதாக இருக்கும்.

நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நாகேஷ் திரையரங்கம் திரையரங்குகளை கவரும்," என்றார்.
திருநாள், போங்கு படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை தாமரை, உமாதேவி, ரோகேஸ், முருகன் மந்திரம், மு.ஜெகன்சேட் எழுதுகிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாகிறது.
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











