நடிகர் திலகம் சிவாஜியின் அரசியலை ஒப்பிட்டு அவதூறாக விமர்சிப்பதா? நடிகர் நாசர் ஆவேசம்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனை அவதூறாக விமர்சிக்க வேண்டாம் என்றும் அது கண்டிக்கத் தக்கது என்றும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜியை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவது அதிகரித்து வருகிறது.
அவருடைய அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, விமர்சகர்கள் கீழ்த்தனமாக விமர்சிக்கின்றன.

கலக்கப் போவது யாரு
ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவரை கிண்டல் அடித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதற்கு நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இனி நடக்காது
சிவாஜியின் மகன் நடிகர் பிரபுவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர், இனி அது போன்று நடக்காது என்று உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசரும் அவரை விமர்சிப்பது கண்டிக்கத் தக்கது என கூறியுள்ளார்.

ஆகப் பெரிய வரம்
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவாஜி கணேசன் இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய வரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேச வைத்ததிலும், திரை நடிப்பு கலையிலும் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும், நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் பயணம்
தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற இவ்வேளையில், திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றனர். சிவாஜியின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு.

கள்ளம் கபடமற்று
பெரும் தலைவர்களோடு பழகியும், பணிபுரிந்தும் வந்தவர். அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார். இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











