400 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன... வெளியாகுமா? - நாசர்
தமிழ்த் திரைப்படத் துறை பெரிய நெருக்கடியில் உள்ளது. இன்றைய சூழலில் 400 க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கின்றன, என்று நாசர் கூறினார்.
நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் லுத்புதீன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் 'பறந்து செல்ல வா'. தனபால் பத்மனாபன் இயக்க, பி.அருமை சந்திரன் தயாரித்துள்ளார்.

படத்தை கலைப்புலி இண்டர்நேஷனல் சார்பில் எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.
விழாவில் நாசர் கலந்து கொண்டு பேசுையில், "இங்கே நான் ஒரு தகப்பன் என்ற முறையிலோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலோ பேச வரவில்லை. சினிமாவின் காதலன் என்ற முறையில் பேச வந்துள்ளேன்.
நான், 4 படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை. பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள்.
400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன.
இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந்த படம் பிரச்சினை இல்லாமல் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது நிறைவேறியதில், மகிழ்ச்சி. தற்போது உதவிக்கரம் நீட்டுபவர்கள்தான் சினிமாவுக்கு தேவை," என்றார்.


Click it and Unblock the Notifications











