Exclusive: “என் வலிகளுக்கு கிடைத்த பலன்”.. தேசிய விருது பெற்ற இயக்குநர் ரஞ்சித்குமார் மகிழ்ச்சி!
சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தனது வலிகளுக்கு கிடைத்த பலன் தான் இந்த தேசிய விருது என சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ள 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' படத்தின் இயக்குநர் ரஞ்சித்குமார் கூறியுள்ளார்.
சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரை சேர்ந்த ரஞ்சித்குமார்.

தேசிய விருது பெற்றுள்ள ரஞ்சித்குமாருக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினோம். மகிழ்ச்சியில் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் மனிதர்.
"ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சிறந்த அறிவியல் தொழில்நுட்பப் பிரிவில் என்னுடைய ஜிடி நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா படம் தேர்வாகியிருக்கு. இவ்வளவு பெரிய விஞ்ஞானி தமிழ்நாட்டில் இருந்தார் என்பதே பல பேருக்கு தெரியாது.
ஒரு விஞ்ஞானியை பற்றி இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்தப் படத்தை எடுத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது என நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இந்த படம் எடுப்பதற்காக அவருடைய சுமார் 125 வருட வாழ்க்கையை பற்றி முழுமையாக ஆய்வு செய்தேன். அவருடைய பேரன், பேத்தி என எல்லோரிடமும் பேசினேன். பிறகு ஒரு மணி நேர படமாக அதை உருவாக்கினேன்.
இந்த படம் எடுக்கும் போது நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் நிறைய வலிகளை, துன்பங்களை அனுபவித்தேன். ஆனால் அவை அனைத்திற்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. அதை நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது", என விடைபெற்றார் ரஞ்சித்குமார்.


Click it and Unblock the Notifications











