தான் அரசியலுக்கு வந்தபோது அண்ணன் கவுண்டமணியின் ரியாக்ஷன் இதுதான்... நவரச நாயகன் கார்த்திக் கலகலப்பு
சென்னை: நவரச நாயகன் கார்த்திக் மிகக் குறைவான படங்களையே தேர்வு செய்து தற்சமயம் நடித்துக் கொண்டிருக்கிறார்
அந்த வகையில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்திக்.
இந்நிலையில் அரசியலிலும் ஈடுபாடுள்ள கார்த்திக் தான் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி எப்படி தன்னிடம் ரியாக்ட் செய்தார் என்பதைப் பற்றி ஒரு பேட்டியில் சுவாரசியமாக கூறியிருக்கிறார்.

அந்தகன்
இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன். அதன் தமிழ் ரீமேக் ரைட்சை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். பிரசாந்த் நடிப்பில் முதலில் அந்தப் படத்தை இயக்குவதற்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மோகன் ராஜாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று பின்னர் நடைபெறாமல் போனது. கடைசியாக தியாகராஜன் அவர்களே இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு படத்தை எடுத்து முடித்தார்.

மர்டர் மிஸ்ட்ரி
அந்தாதூன் திரைப்படத்தில் ஒரு கொலையில் கதாநாயகன் சிக்கிக்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. அதில் வில்லியாக தபு நடித்திருப்பார். தமிழில் அந்தக் கதாபாத்திரத்தில் சிம்ரன்தான் நடித்துள்ளார். கார்த்திக் அவருடைய கணவனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை வைத்துதான் படத்தின் கதையே துவங்கும். நடிகர் கார்த்திக் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில்தான் நடிகர் தியாகராஜனும் அறிமுகமானார் என்பது கூடுதல் தகவல்.

அரசியல் பயணம்
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது அந்த காலகட்டத்தில் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நடிகர் கார்த்தியும் உச்சத்தில் இருந்தபோது இரண்டு கட்சிகள் துவங்கினார். ஆனால் பெரிதளவில் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்களில் கார்த்திக்குடன் வெற்றிகரமான நகைச்சுவை கூட்டணி அமைத்த கவுண்டமணி எப்படி ரியாக்ட் செய்தார் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

கவுண்டமணி ரியாக்ஷன்
ஒரு முறை அரசியல் பயணத்திற்காக தமிழகம் முழுக்க சுற்றி வந்த கார்த்திக் பின்னர் ஒரு ஷூட்டிங்கில் கவுண்டமணியுடன் கேராவனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது,"அப்புறம் தம்பி சுற்றுப்பயணம்லாம் எப்படி இருந்தது" என்று கேட்டுவிட்டு தன்னுடைய நக்கலான பாணியில் "எதுக்கு?" என்பதுபோல் கேட்டாராம். அரசியலில் இவ்வளவு சவால்கள் இருக்கும் என்று கவுண்டமணி அண்ணனுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும்போல அதனால்தான் என்னிடம் அப்படி கேட்டார். நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பை விட ஒரு அண்ணனாக அவர் என் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளார் என்று கார்த்திக் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











