காவித் தலைவரின் பயோபிக்கில் முஸ்லீம் நடிகர்... இந்திய சினிமா எதிர்பார்க்கும் 'தாக்கரே'!
மும்பை : 'மும்பை சிங்கம்' என அழைக்கப்படுபவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் ஹீரோ பால் தாக்கரே. மஹாராஷ்டிரா மக்களின் உரிமைக்காக போராடிய அவர் சிவசேனா கட்சியை தொடங்கி மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார்.
தனது ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் மும்பையில் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்தார். கடந்த 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது அவரது வாழ்க்கை சினிமாவாகிறது.
இந்தப் படத்தை சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். அபிஜித் பன்சே இயக்குகிறார். இதில் பால் தாக்கரேவாக பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார்.
தாக்கரே டீசர்
பால் தாக்கரேவின் வாழ்க்கைப் படமான 'தாக்கரே' படத்தின் டீசரை நேற்று மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பால் தாக்கரேவின் குடும்பத்தினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த விழாவில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும் கலந்துகொண்டார்.

நடிகர்கள் தேர்வு
நவாஸுதீன் சித்திக் தவிர மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முக்கியமாக பால் தாக்கரேவின் பால்ய பருவம், இளமைப் பருவம் ஆகியவற்றில் நடிக்க அதே முகத்தோற்றம் கொண்ட நடிகர்களை தேடி வருகிறார்களாம்.

இந்து தலைவர் படத்தில் ஒரு முஸ்லீம்
இந்து மதம் சார்ந்த அமைப்பின் தலைவராக, வாழ்நாள் முழுக்க இந்துத்வ கொள்கைகளோடு வாழ்ந்த தலைவரின் பயோபிக்கில் முஸ்லீம் நடிகர் ஒருவர் நடிப்பது பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நவாஸுதீன் சித்திக்
நவாஸுதீன் சித்திக் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரள வைத்தவர். கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் பாலிவுட் நடிகர்களில் மிக முக்கியமானவர் நவாஸுதீன் சித்திக். தாக்கரே கேரக்டருக்கு நவாஸுதீன் செமையாக பொருந்தியுள்ளதாக பலரும் கூறி இருக்கின்றனர்.

தயாரிப்பாளர் சஞ்சய் ராவத்
'தாக்கரே' படம் குறித்து தயாரிப்பாளர் சஞ்சய் ராவத், "எங்கள் தலைவர் பால்தாக்கரேவின் வாழ்க்கையை நான் எனது சொந்த செலவில் தயாரிக்கிறேன். அவரது வீரம் செறிந்த போராட்ட வாழ்க்கையை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

மும்பையில் படப்பிடிப்பு
அபிஜித் பன்சே இயக்கும் 'தாக்கரே' படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரியில் தொடங்குகின்றன. 90 சதவிகித ஷூட்டிங் மும்பையிலேயே நடக்கும் எனக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய் ராவத்மிந்தப் படம் 2019 ஜனவரியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











