நாயகன் வந்துட்டார்...விதை நான் போட்டது...விசில் பறக்கும் கமலின் மாஸ் பேச்சு
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலையும் அள்ளி குவித்தது.
விக்ரம் படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 450 கோடி வரை விக்ரம் படம் வசூல் செய்துள்ளது. விஜய், அஜித் படங்களின் சாதனையை கமல் படம் முறியடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ரஜினியின் 2.ஓ படத்திற்கு பிறகு தமிழில் வெளியாகி அதிக வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் விக்ரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. விக்ரம் படம் எப்போது 500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்கெட் குறைந்ததால் அரசியலுக்கு வந்தேனா
இந்த சமயத்தில் விக்ரம் படத்தின் 50வது நாளை முன்னிட்டு, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கமல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்த மாதிரி வெற்றி எல்லாம் ஆசைப்படுவோம். நடக்காது. ஆனால் அவர்கள் நடத்தி காட்டி உள்ளனர். ஹேராம் படத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கு பத்தல. பத்தல பத்தல தான். அவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து விட்டது அதனால் தான் அரசியலுக்கு வந்து விட்டார் என்றார்கள். அவங்க தான் அப்படி வந்திருப்பாங்க.

கமல் தலைவனாக காரணம்
நீங்கள் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால், அரசியல் உங்களை பாதிக்கும். தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவன் ஆகி விடுங்கள். அதனால் தான் நான் தலைவனானேன். நமக்கு எதுக்கு அசிங்கம் என ஒதுங்கி விடாதீர்கள். இதை எடிட் செய்தால் கூட எனக்கு கவலையில்லை. இங்கு உள்ள 100 - 200 பேர் கேட்டால் போதும் என்றார்.

நான் ஊரை விட்டு போனால் யாருக்கு அசிங்கம்
கமல் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், ஐ லவ் யூ சார் என கூச்சலிட்டார். அதற்கு கமலும் பதிலுக்கு ஐ லவ் யூ டூ என்றதும், அரங்கத்தில் விசில் பறந்தது. கோழை...ஒரு படம் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றதும் ஊரை விட்டு ஓடுவேன் என்றவர் என என்னை பார்த்து சொன்னார்கள். ஆனால் அதற்கு முன்பே தேவர்மகனில் அவர்களுக்கு பதில் சொல்லி உள்ளேன். இந்த மாதிரி கேவலமான ஆட்கள் இருக்கும் ஊரில், நான் ஊரை விட்டு போனால் யாருக்கு அசிங்கம்?

விதை நான் போட்டது
மணிரத்னத்திற்கு இந்தி தெரியாது. பிடிவாதமாக அவர் கற்கவில்லை. ஆனால் அவர் படித்தது எல்லாம் மும்பையில் தான். எனக்கு தெரிந்து முதலில் இந்தியை எதிர்த்தவர் மணிரத்னம் தான் என்றார் கமல்.கமல்ஹாசனின் எதிர்காலம் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், நாயகன் வந்துட்டார். நேற்றும், இன்றும் நினைப்பது நாளை நமதே. நான் இன்னும் 50 வருஷத்துக்கு பிளான் போடல. 200 வருஷத்திற்கு பிளான் போடுறேன். விதை நான் போட்டது என்றார்.


Click it and Unblock the Notifications











