தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியது
நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்த நயன் விக்கி தம்பதி அக்டோபரில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதாக அறிவித்தனர்.
நயன் விக்கி குழந்தைப்பெற்ற விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில் அவர்கள் விதிகளை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன் விக்கி திருமணம்
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்கும் நயன்தாரா தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகை இவர்தான். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

நயன் விக்கி திருமணம்..இரட்டைக்குழந்தை
திருமணத்திற்கு பின் இருவரும் படபிடிப்பில் மும்மூரமாயினர். தாங்கள் போகும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர். அவர்கள் புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. நயன் 40 வயதை நெருங்கும் நிலையில் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அக்.9 ஆம் தேதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளுக்கு தாயானார் நயன் என அறிவித்தார் விக்னேஷ். இதனால் ஊடக உலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வாடகைத்தாய் சட்டம் பற்றி ஒரு நடிகை எடுத்து போட அதன் மீதான விவாதம் பெரிதானது.

வாடகைத்தாய் நெறிப்படுத்தும் சட்டமும் அமைச்சர் விளக்கமும்
வாடகைத்தாய் சட்டம் ஜனவரி 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் நயன் விக்கி விதிமீறலில் ஈடுபட்டனர் என்கிற வாதம் வைக்கப்பட்டது. அமைச்சர் மா.சுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். வாடகைத்தாய் சட்டம் ஜனவரி 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும் அதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டு போர்டு, அத்தாரிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டப்பின்னரே சட்டம் அமலானதாக கருதப்படும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சட்டத்தில் சொல்லப்படும் விதி மீறல் சம்பந்தப்பட்டவர்களை கட்டுப்படுத்தாது, ஆகவே நயன் விக்கியை கட்டுப்படுத்தாது என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

நயன் விக்கி விளக்கம்
தாங்கள் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துள்ளோம், வாடகைத்தாய் விவகாரத்தில் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு பதிவு செய்தோம் எந்த விதிமீறலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிவித்திருந்தனர். இதனிடையே மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து முழுமையான அறிக்கை நாளை (இன்று) மாலை விரிவாக அரசு அளிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பித்தார் நயன்தாரா..சிக்கியது மருத்துவமனை
வாடகைத்தாய் விவகாரத்தில் விசாரணையில் நயன் விக்கி தம்பதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே குழந்தைகள் பெற்றது தெரிய வந்துள்ளது. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ள அடிப்படையில் அவர் வாடகைத்தாயாக நியமிக்கப்பட்டுள்ளதும் முறைப்படி நடந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தம்பதி திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவுப்பெற்றிருக்க வேண்டும் என்கிற விதிப்படி நயன் - விக்கி தம்பதி 2016, மார்ச் 11ல் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் சமர்ப்பித்துள்ளதால் அந்த விதியும் மீறப்படவில்லை ஆகவே நயன் விக்கி தம்பதி விதிமீறலில் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது.

சிக்கிய மருத்துவமனை
சினைமுட்டை விவகாரங்களையும், வாடகைத்தாய், பெறுபவர்கள் விவரங்களை சரிவர சேமித்து வைக்காமல் இருந்ததாக மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனைக்கு விளக்கம் கேட்கப்பட்டு அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











