நயன்தாரா திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம்... இதுதானாம்
சென்னை: நயன்தாரா திரையரங்கிற்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் நானும் ரவுடிதானாம், இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
50 திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நயன்தாரா இதுவரை தான் நடித்த எந்தப் படத்தையும் திரையரங்கிற்குச் சென்று பார்த்தது கிடையாதாம்.
தனது திரை வாழ்வில் முதன்முறையாக நயன்தாரா தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்திருக்கிறார்.

நானும் ரவுடிதான்
விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நானும் ரவுடிதான். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார்.லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதில் தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நயன்தாரா
இந்தப் படம் குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில் "நாயகியாக நயன்தாராவை முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். ஆனால் நாயகன் யார் என்பதுதான் எனக்கு முன்னால் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. முதலில் அனிருத்தை நடிக்கவைக்கலாம் என்று நினைத்தேன், கவுதம் கார்த்திக்கையும் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி கூட 2 புதுமுகங்களை சிபாரிசு செய்தார். ஆனால் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒரு கேள்விக்கு நயன்தாராவைக் கடத்திக் கொண்டு போகலாம் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது எனவே அவரையே இந்தப் படத்தில் நாயகனாக முடிவு செய்தேன். படத்தின் கதை பிடித்துப் போனதால் தனுஷ் இதனைத் தயாரிக்க முன்வந்தார்.

கஷ்டப்பட்ட நயன்தாரா
முதன்முறையாக டப்பிங் பேசுவதால் படத்தின் டப்பிங்கிற்காக நயன்தாரா நிறைய மெனக்கெட்டார். அழுதுகொண்டே பேசும் காட்சிக்கு கிளிசரின் போட்டு அழுதுகொண்டே பேசினார். படத்தில் எப்படி உட்கார்ந்து கொண்டு வசனங்கள் பேசி இருக்கிறாரோ, அதேபோல டப்பிங் தியேட்டரிலும் உட்கார்ந்து கொண்டு பேசினார். அவருடைய அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது, அவரின் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பது இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான்.

முதல்முறையாக
முதன்முறையாக நானும் ரவுடிதான் படத்திற்கு டப்பிங் பேசிய நயன்தாரா திரையரங்கு சென்று பார்த்த முதல் திரைப்படமும் இதுதான். இதுவரை 50 படங்கள் வரை நடித்திருக்கும் அவர் எந்தப் படத்தையும் திரையரங்கு சென்று பார்த்தது இல்லையாம்" இவ்வாறு படம் குறித்த சுவாரசிய விசயங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











