விமர்சனங்களுக்கு நோ ரியாக்ஷன்… வெற்றிகளுக்கு தலைமேல் இடமில்லை: நயன்தாராவின் சக்சஸ் ஃபார்முலா
சென்னை: தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நயன், இன்று கோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் பலவிதமான விமர்சனங்களை கடந்து தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வெற்றியின் ரகசியத்தை பார்க்கலாம்.

டயனா என்ற நயன்தாரா
"ஹீரோயினுக்கு தேவையான வசீகரம் இல்லையே... நம்ம படத்துக்கெல்லாம் இந்த பொண்ணு சரியா வராது... அதுவும் சூர்யாவுக்கு ஜோடியாக இந்த டயானா வேண்டாம்... வேற நடிகையை புக் செய்யலாம்" என 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் இருந்து நீக்கப்பட்டவர் டயானா. யார் இந்த டயானா?, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கி, இன்று லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வரும் நயன்தாரா தான் அது என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், அதுதான் மறுக்க முடியாத உண்மை. சில்லுனு ஒரு காதல் படத்திற்கான ஆடிஷனுக்கு முன்பே மலையாளத்தில் அறிமுகமான நயனுக்கு, கோலிவுட்டில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைத்திடவில்லை.

நயன் போட்ட எதிர் நீச்சல்
மலையாளத்தில் நயன் நடித்த முதல் மூன்று படங்களும் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை. அதேநேரம் சில்லுனு ஒரு காதல் படத்தின் ஆடிஷனும் அவருக்கு ஃபேவராக இல்லை. ஆனாலும் மனம் தளராத நயனின் விடா முயற்சிக்கு 'ஐயா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரத்குமார் ஜோடியாக இவ்வளவு இளம் நாயகியா என கேள்வி எழுப்பியவர்களுக்கு, சுட்டித்தனமும் முதிர்ச்சியும் நிறைந்த நடிப்பால் வாயடைத்தார். ஐயா படத்தின் செல்விக்கு, அடுத்த படத்திலேயே ரஜினியுடன் துர்கா என்ற கேரக்டரில் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா தான் லீடிங் கேரக்டர் என்றாலும், ரஜினியுடன் ஜோடியாக நடித்தால் தமிழ்த் திரையுலகின் கவனம் பெற முடியும் என்ற நயனின் கணக்கு தப்பவில்லை.

விமர்சனங்களுக்கு நோ ரியாக்ஷன்
நயனின் கணக்கு சரியாக ஒர்க் அவுட் ஆனது, அங்கிருந்து தொடங்கிய அவரது அசுர பாய்ச்சலுக்கு இதுவரை யாராலும் எண்ட் கார்டு போடமுடியவில்லை. இனியும் கூட அது சாத்தியமா என்றால் அதற்கும் இங்கு யாரிடம் விடை கிடையாது. ஆரம்ப காலத்தில் அவரது நடிப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன, அடுத்தடுத்து பிரபுதேவா, சிம்பு, ஆர்யாவுடன் காதல் என அடுக்கடுக்கான சர்ச்சைகளும் வெடித்தன. ஆனால், எதற்கும் ரியக்ஷன் இல்லாமல், தானுண்டு தன் வேலை உண்டு என தனது பாதையில் கெத்தாக முன்னேறினார்.

ரோல் மாடலான லேடி சூப்பர்
பல்வேறு விமர்சனங்கள் மூலம் மனரீதியாக நயன்தாராவை முடக்க எவ்வளவும் தகிடுத்தத்தோம் வேலைகள் ஜரூராக நடந்தன. ஆனால், எங்கும் எதற்கும் இடம் கொடுக்காமல் அமைதியையும் பொறுமையையும் மட்டுமே பதிலாக கொடுத்தார் நயன். காதல் குறித்த சர்ச்சைகளுக்கு ஆண்களுக்கே சவால் விடும் வகையில் அவர் பக்குவமாக நடந்துகொண்டது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்று தனது திறமையால் பாலிவுட் வரை தடம் பதித்து விட்ட நயன், சமீபத்தில் கூட வாடகைத் தாய் விவாகரத்தில் ஸ்மார்ட்டாக நடந்து கொண்டார். இங்கே எல்லோருமே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். ஆனால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தான், அவர்களின் தனித்திறமை உள்ளது. அதில், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதே நயனின் ரியல் சக்சஸ் ஃபார்முலா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











