ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவில்.. டைகர் விருதுக்கு போட்டியிடும் நயன்தாராவின் கூழாங்கல்!
சென்னை: நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் என்ற படம் ரோட்டர்டாம் சர்வதேசப் பட விழாவில் போட்டிப் பிரிவுக்கு தேர்வாகி இருக்கிறது.
நயன்தாரா, மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

வாங்கி வருகிறது
இதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, மற்ற நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது. அதன்படி படங்களை வாங்கி வருகிறது.

தமிழக உரிமை
முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி என்ற படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் என்ற படத்தின் உரிமையை பெற்றுள்ளனர். இதை அவர்கள் அறிவித்து இருந்தனர்.

ஆழமான தாக்கம்
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இதன் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம் என்று கூறியிருந்தனர்.

டைகர் போட்டி
இந்நிலையில் இந்தப் படம், 50 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் போட்டிப் பிரிவில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறது. இந்த பிரிவில் 16 உலகப் படங்களோடு இந்த படமும் போட்டியிடுகிறது. இந்தப் பட விழா, பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











