கோலிவுட்டில் மீண்டும் தலையெடுக்கும் நெப்போடிசம் சர்ச்சை; சான்ஸ் ஈஸியா கிடைக்கும், ஆனா சக்ஸஸ்?
சென்னை: கோலிவுட்டில் நெப்போடிசம் சர்ச்சை மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
பிரபலங்களின் வாரிசாக இருந்தால் ஈஸியாக சினிமா வாய்ப்புகள் கிடைப்பதாக எழும் சர்ச்சைகளின் பின்னணி என்ன.?
திரைத்துறையில் நெப்போடிசம் எந்தளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என நெட்டிசன்கள் தற்போது விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

அன்று முதல் இன்று வரை
தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சுற்றிவரும் ஒரே சர்ச்சை நெப்போடிசம் தான் என்பதில் சந்தேகமே இல்லை. பாலிவுட் முதல் கோலிவுட் வரை, அன்று முதல் இன்று வரை இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. அதேபோல் இதற்கான தீர்வுகளும் இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனாலும், சினிமாவுலகில் நெப்போடிசம் இல்லையென்று மறுக்கவே முடியாது.

வடக்கில் இருந்து தெற்கு முதல்
நெப்போடிசம் என்ற சொல்லை தமிழ் சினிமாவோடு மட்டும் பொருத்திப் பார்க்க முடியாது. ஏற்கனவே சொன்னதுபோல், இது பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், சண்டல்வுட் என அனைத்து மொழிகளிலும் தொற்றுநோய் போல பவரவியுள்ளது. இந்தி திரையுலகையே சில குறிப்பிட்ட குடும்பங்கள் கட்டி ஆண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கன்னடத்தில், குமார குடும்பத்தினர் மனசு வைத்தால் தான், மற்றவர்கள் திரைத்துறையில் அடியெடுத்து வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. தெலுங்கிலோ ஒரு மெகா குடும்பமே டோலிவுட்டின் குடுமியை கையில் வைத்துள்ளது. மலையாளத்தில் நெப்போடிசம் பற்றி கேட்கவே வேண்டாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவில் வாரிசுகளின் வருகை
தமிழில் நெப்போடிசத்தின் ஊடுருவல் எப்போது நடந்தது என, மிகச் சரியாக சொல்லிவிட முடியாது. ஆனால், கறுப்பு வெள்ளை காலம் முடிந்து ஈஸ்ட்மெண்ட் கலர் படங்கள் வெளியாகும் போதே, வாரிசுகளின் வருகைகள் கோலிவுட்டை படுஜோராக அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியத் திரையுலகையே தனது நடிப்பால் கட்டிப் போட்ட அந்த பெரிய நடிகர் வீட்டில் இருந்து, சின்ன தம்பி முதலில் அடியெடுத்து வைத்தார். அதேபோல் முத்தான அந்த நடிகரின் மகனும் கிராமத்து மண்வாசனை கொண்ட இயக்குநரால் ஓயாத அந்த அலைகள் படத்தில் அறிமுகமானார்.

அடுத்தடுத்து என்ட்ரி கொடுத்த ஹீரோக்கள்
நேரடி வாரிசாகவோ அல்லது ஏதேனும் உறவின் முறையையோ தங்களது அடையாளமாக எடுத்துக்கொண்ட பலரும், கோலிவுட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அதில், தற்போதைய கோலிவுட்டின் கலெக்ஷன் மாஸ்டர், வைகாசியாய் மலர்ந்த நாயகன், அண்ணனின் துணையோடு அறிமுகமான நடிப்பு அசுரன், பல வித்தைகளுக்கு சொந்தமான அப்பாவின் அரவணைப்போடு ஆட்டம் போடும் லிட்டில் சூப்பர் நட்சத்திரம், ஜெயமான அந்த நடிகர், கோலிவுட் மார்க்கண்டேய என அழைக்கப்படுபவரின் மகன்கள், ஆறடி உயர சத்ய நடிகரின் வாரிசு என இந்த லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும்.

இயக்குநர்களின் வாரிசுகள்
அதேபோல், இயக்குநர்களும் தங்களது வாரிசுகளை திடகாத்திரமான நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினர். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளோடு மும்தாஜின் நினைவுச் சின்னத்தை பெயராக கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கிராமத்து இயக்குநரின் மகன். அதேபோல், தனது திரைக்கதையால் இந்தியத் திரையுலகையே அசரடித்த அந்த லேடீஸ் செண்டிமென்ட் இயக்குநரின் மகன் என, இந்தப் பக்கமும் பட்டியலை சாமிக்கு படையலிட்ட பலகாரங்கள் போல அடுக்கிக் கொண்டே போகிறார்கள் நெட்டிசன்கள்.

வெற்றியும் தோல்வியும் திறமையுள்ளவனுக்கு சகஜம்
இங்கே வாரிசாக அடியெடுத்து வைத்தவர்களை விட, நேரடியாக சினிமாவில் அறிமுகமாகி 'அமர்க்களம்' செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம், அதேபோல் அவர்கள் செய்த சாதனைகளும் ஏராளம். இது எல்லோருக்கும் எளிதாக நடப்பதில்லை, முயற்சியும் மூர்க்கத்தனமான உழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியம். குறிப்பாக இந்த கோட்பாடு சினிமாத் துறையில் எல்லாருக்கும் பொதுவானது. வெற்றியோ தோல்வியோ இரண்டையும் திறமையுள்ள ஒருவனால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.

மீளமுடியாத வாரிசுகள்
நடிகர்களைப் போலவே நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என எல்லாத் துறைகளிலும் வாரிசுகள் வகைதொகையில்லாமல் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் மட்டுமே எளிதாகக் கிடைத்திருக்கலாம், முன்னும் பின்னுமாக அலசிப் பார்த்தால் திறமை இருந்தவர்கள் மட்டுமே இங்கு வெற்றி நாயகர்களாக ராஜநடை போட்டு வருகின்றனர். ஊருக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவரின் வாரிசுக்கும் வாரிசு, இன்று நடிப்பில் சுமார் என்றே ரசிகர்கள் கூறுகின்றனர். மரம், செடி, கொடி என எல்லாவற்றுக்கும் நடிக்க கற்றுக்கொடுத்தவரின் வாரிசு, இன்றோ நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் ஜொலிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பிரேக் டான்ஸ்க்கு பெயர் பெற்ற பழங்கால காமெடி நடிகரின் வாரிசு, வந்த வேகத்தில் காணாமல் போனார்.

துவண்டுவிடாமல் போராடியவர்கள்
இன்றைய கோலிவுட் இளம் டாப் ஸ்டார், அவரது அப்பா இயக்கிய படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல தடைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதனால் தான் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார். அவருக்குப் போட்டியாக பார்க்கப்படும் ரசிகர்களின் அந்த தலையாய நடிகரும், எந்த ஆதரவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தாலும், அவரும் திறமையாலே இன்னும் திரையுலகை தெறிக்கவிடுகிறார். கோலிவுட்டுக்கே லாயக்கு இல்லாதவர் என கிண்டலடிக்கப்பட்ட அந்த ஒல்லி ஹீரோ தான், இன்று ஹாலிவுட் வரை றெக்கைக் கட்டி பறக்கிறார். நிரந்தர சூப்பர் நட்சத்திரம் முதல் இப்போதைய கோலிவுட் டான், வித்தியாசமான நடிகர் என எல்லோருமே திறமையால் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றனர்.

இங்கும், எங்கும் திறமை மட்டுமே தீர்வு
நெப்போடிசம் திரைத்துறையில் மட்டும் படிந்திருக்கவில்லை, அரசியல், விளையாட்டு, வர்த்தகம், வாணிபம் என எங்கும் படர்ந்துவிட்டது. இதில் எந்த எல்லைகளுக்குள் சென்று நாம் விடை தேடினாலும், அங்கு முதன்மையாகவும் முடிவாகவும் திறமையும் வலிகளுடன் கூடிய தன்னம்பிக்கை நிறைந்த போராட்டம் மட்டுமே தீர்வாகத் தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுவே உண்மையென்பது கடந்தகால வரலாறுகளில் சாட்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











