க்யூப் 100 சதவிகித தள்ளுபடி.. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது புதுப் படங்கள்.. பாரதி ராஜா அறிக்கை!
சென்னை: கியூப் நிறுவனத்தில் 100 சதவீத தள்ளுபடியால், தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக, மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது.
தமிழக அரசு, 10 ஆம் தேதி முதல் 50 இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

விபிஎப் பிரச்னை
இதையடுத்து 8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டன. பெரும்பாலான தியேட்டர்களில் மிகவும் குறைவான ரசிகர்களே வந்திருந்தனர். இந்நிலையில் விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது என்று கூறியதால், தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.

சுமூகமான தீர்வு
நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படாததால், நல்ல தீர்வு ஏற்படும்வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருந்தார்.

100 சதவீத தள்ளுபடி
இந்நிலையில் க்யூப் நிறுவனம், விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும் என்று அறிவித்தது. இதனால் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

திரைத்துறை சங்கங்கள்
அதன்படி தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி நடப்புத் தயாரிப்பாளர சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

ஓநாய் அழுத கதை
VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜெக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது.

பங்காளி சண்டை
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

உறுதியாக உள்ளோம்
அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











