இப்படியொரு பஞ்சாயத்து.. கோரிக்கை நிராகரிப்பு.. தியேட்டர் திறக்கப்பட்டாலும் படங்கள் ரிலீஸ் ஆகுமா?
சென்னை: தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இருந்தும் சில மாநிலங்கள் தியேட்டர்களை திறக்க உடனடியாக அனுமதி அளிக்கவில்லை.

பழைய சிக்கல்
இந்நிலையில் தமிழக அரசு, இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து தீபாவளிக்காக சில படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் முடிவு செய்துள்ளனர். எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பழைய சிக்கல் பரபரப்பாகி இருக்கிறது.

வசூலிக்கக் கூடாது
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட, பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது: தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியதும், இனிமேலும் வி.பி.எஃப் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றோம்.

டிஜிட்டல் புரொஜக்ஷன்
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்து டிஜிட்டல் புரொஜக்ஷன் (QUBE/UFO/PRASAD) நிறுவனங்களுக்கும் முறையாகக் கடிதம் அனுப்பினோம். அதில் 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும் VPF என்கிற வாராவாரம் கட்டணத்தை, இனிமேல் கொடுக்க முடியாது.

லீஸ் தொகை
டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை (ONE TIME PAYMENT) கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தர முடியும் என்று தெரிவித்து இருந்தோம். திரையரங்கில் உள்ள புரொஜக்டர் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள்தான் கட்ட வேண்டும், தயாரிப்பாளர்கள் அல்ல என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

வெளியிட முடியாத
அத்தகைய, ஒரு முறை கட்டண முறைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும், எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

செவி சாய்க்காமல்
100 பேருக்கும் மேல் நடப்பு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துத் தெரிவித்த போதிலும், திரையரங்கு உரிமையாளர்களும், டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களும் (QUBE/UFO), எங்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், நாங்கள் தொடர்ந்து வி.பி.எஃப் கட்டணத்தை வாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்க முடியாது
தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த 5 கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அவர்கள் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளதால், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முடிவு எடுக்கும்படி
எனவே, இந்த வி.பி.எஃப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும், தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











