“சினிமாவில் திறமைக்கு மதிப்பில்லை… உடம்பை காட்டினால் தான் சான்ஸ்”: பொங்கிய சிம்பு பட நாயகி
சென்னை: சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நிதி அகர்வால்.
அதேபோல், ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்திலும் நிதி அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், சினிமாவில் நடிக்க திறமை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு இங்க இன்னும் நிறைய தகுதிகள் வேண்டும் என சர்ச்சையான கருத்துகளை மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட் டூ கோலிவுட்
2017ம் ஆண்டு பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நிதி அகர்வால், அதன்பிறகு தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். சுசிந்திரன் இயக்கிய இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாக 'பூமி' படத்திலும் நடித்திருந்தார். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை வந்துவிட்ட நிதி அகர்வால், தற்போது 'கலக தலைவன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

திறமைக்கு மதிப்பில்லை
கலக தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலுங்கிலும் ஹரி ஹர வீர மல்லு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சினிமாவில் நடிக்க திறமையை விட உடம்பு தான் முக்கியம் என வெளிப்படையாக பேசி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது, 'திரையுலகில் நடிகையின் திறமையை பார்த்து தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றால் அதை நான் நம்பவேமாட்டேன். இங்கே பெண்ணின் அழகை பார்த்துதான் முடிவு செய்கிறார்கள். திறமைக்கு இங்கே மதிப்பே கிடையாது, பெண்கள் தங்களது உடம்பை காட்டினால்தான் கேமராவின் முன்னால் நிற்க முடிகிறது" என்றுள்ளார்.

ரொம்பவே குறைவு
மேலும், தொடர்ந்து பேசியுள்ள நிதி அகர்வால், "இதில் விதிவிலக்காக இருபது சதவீதம் பேர் மட்டுமே பெண்களின் திறமையைப் பார்த்து சான்ஸ் கொடுக்கின்றனர். முக்கியமாக எனக்கு டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு எனது சம்பளம்தான் காரணம். சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்யாமல், தயாரிப்பாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன். இப்போது வரை நான் நடிக்கும் படங்களில் எல்லாம் சம்பளம் குறைவாக இருந்ததால் தான் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னர் நாயகியாக நடிக்க படக்குழுவினர் தேடிச் சென்ற நடிகைகள் எல்லோரும் சம்பளம் அதிகமாக கேட்டதால் அவர்களை கமிட் செய்யாமல், எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்
நிதி அகர்வால், ஒரு படத்தில் நடிக்க 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகை தமன்னாவும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். திரையுலகில் திறமைக்கு மதிப்பே கிடையாது, இங்கே யாரையும் நம்ப முடியவில்லை எனக் கூறியிருந்தார். இப்போது வளர்ந்து இளம் நடிகையான நிதி அகர்வாலும் அதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இவர்களைப் போல மேலும் பல நடிகைகளும் சினிமாவில் பெண்களின் நிலை குறித்து பேசியுள்ளனர். ஆனாலும், இந்த பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், நிதி அகர்வாலின் இந்த பேச்சு, திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











