நைஜீரிய நடிகருக்கு கூடுதல் சம்பளம்.. ரேஸிசம் புகார் பிரச்னையில் தீர்வு!
திருவனந்தபுரம் : சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை சக்காரியா எனும் அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நடித்த நைஜீரியா நாட்டை சேர்ந்த சாமுவேல் ஆப்ரஹாம் எனும் நடிகர், இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் நிற வேற்றுமை காரணமாக தன்னை கீழ்மையாக நடத்தினார்கள் என்றும், சாதாரண நடிகர்களுக்கு வழங்கிய சம்பளத்தை விட முக்கிய வேடத்தில் நடித்த தனக்கு குறைவான சம்பளத்தை கொடுத்தார்கள் எனவும் வருத்தம் தெரிவித்தார்.

ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், "அவருக்கு பேசிய தொகை முழுவதையும் முன்கூட்டியே கொடுத்து விட்டோம். படம் வெளியாகி வெற்றிபெற்று லாபம் வரும் பட்சத்தில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும் சாமுவேல் உட்பட இன்னும் சில நடிகர்களுக்கும் தருவதாக சொல்லியிருந்தோம்.
படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கலெக்ஷன் விவரம் இன்னும் கிடைக்கப்பெறுவதற்குள் சாமுவேல் ஆப்ரஹாம் அவசரப்பட்டு இப்படி கூறிவிட்டார்" என பதில் தெரிவித்திருந்தனர்.
தற்போது, படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நைஜீரிய நடிகர் சாமுவேலுக்கு வழங்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். நைஜீரியா சென்றுவிட்ட சாமுவேல், "தவறான புரிதல் காரணமாக குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இப்போது எல்லாம் தீர்ந்துவிட்டது. வெளிநாட்டவர் வந்து செலவதற்கு கேரளா அருமையான இடம்" என தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











