விருது பெறத் தவறிய பிரேமம்.. வருத்தப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை: பிரேமம் படத்திற்கு கேரளா அரசு விருது வழங்காதது சரியல்ல என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி மலையாளம் மற்றும் தமிழ்த்திரையுலகை ஒருசேரக் கலக்கிய படம் பிரேமம். நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
உலகளவில் 60 கோடிகளை வசூலித்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 250 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. மேலும் இயக்குநர் ஷங்கர் தொடங்கி விஜய் வரை பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர்.

கேரள அரசு விருதுகள்
நேற்று அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகளில் இப்படம் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். மேலும் பிரேமம் படத்துக்கு விருது அறிவிக்காத கேரள அரசை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ்
இந்த விமர்சன வரிசையில் இயக்குநர் முருகதாஸும் தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து " பிரேமம் படத்துக்கு விருது கொடுக்காதது அழகல்ல" என்று அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் ஆதரவு
இவரின் கருத்துக்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. பிரேமத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் "எனக்கும் அதே மன நிலைதான். என்ன படம் அது"என்று கூறியுள்ளனர்.
வெறும் பொழுதுபோக்கு
ஆனால் முருகதாஸின் கருத்தை ஒப்புக்கொள்ளாத ரசிகர்கள், விருதுக்கு தேர்வான மற்ற படங்களை நீங்கள் பார்த்தால், பிரேமம் ஒரு பொழுதுபோக்கு படம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று கூறியிருக்கின்றனர்.

வருந்தும் தமிழர்கள்
எது எப்படியோ பிரேமம் படத்திற்கு விருது அளிக்காதது கேரளா தாண்டி, தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications











