இந்த தீபாவளிக்கு என்னென்ன படங்கள்... ரிலீசாகும் வாய்ப்பிருக்கா?
சென்னை: இந்த தீபாவளிக்கு மெர்சல் உள்ளிட்ட நான்கு படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சினிமா கட்டண உயர்வு, புதுப்படங்களை வெளியிடுவதில் நீடிக்கும் தடை என சிக்கல் தொடர்வதால், படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி தொடர்கிறது.
இந்த தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள 'மெர்சல்', நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் 'அறம்', சரத்குமார் நடித்துள்ள 'சென்னையில் ஒருநாள்-2', சசிகுமாரின் 'கொடிவீரன்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசு தரப்புடன் திரைத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.
கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை கடந்த இரு வாரங்களாக தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை மூடப்போவதாக தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் அறிவித்தனர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன.
இதையடுத்து தியேட்டர்களுக்கு சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து தாறுமாறாக விலையை உயர்த்தியுள்ளன திரையரங்குகள். ஆனால் சென்னை அரங்குகளில் ஒரு விலையும் புறநகர், சிறுநகர் அரங்குகளில் ஒரு விலையும் இருப்பதால், அனைத்து திரையரங்குகளுக்கும் ஒரே மாதிரி டிக்கெட் விலை வைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் நல்ல முடிவு ஏற்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டாலும் தீபாவளிக்கு 'மெர்சல்' படம் திரைக்கு வரும் என அதன் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
மற்ற படங்களில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறித்து இதுவரை தெளிவான விவரம் கிடைக்கவில்லை. இன்று மாலைக்குள் எந்தெந்த படங்கள் என்பது உறுதியாகிவிடும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.


Click it and Unblock the Notifications











