பிரபல நடிகர்களுக்கே அழைப்பு இல்லை... நடிகர் சங்கத்தின் பாரபட்சம்!
கோலாலம்பூர் : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் நட்சத்திர கலைவிழா மலேசியாவின் கோலாலம்பூரில் நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நடிகை ராதிகா உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லையாம்.

நட்சத்திர கலைவிழா
நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக முந்நூறுக்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவே கிளம்பி மலேசியா சென்றுள்ளார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் 'விஸ்வரூபம் 2' பணிகளில் இருந்த கமல்ஹாசன் இன்று மலேசியா வந்துள்ளார்.

சரத்குமாருக்கு அழைப்பு இல்லை
மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர விழா 2018 நிகழ்ச்சிக்கு, நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார், அவருடைய மனைவி சீனியர் நடிகையான ராதிகா சரத்குமார் மற்றும் முன்னாள் செயலாளர் ராதாரவி ஆகியோர் அழைக்கப்படவில்லை.
ட்விட்டரில் ராதிகா
நட்சத்திர விழா பற்றி நடிகை ராதிகா சரத்குமாரிடம் சில ரசிகர்கள் நீங்கள் ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டதற்கு, தாங்கள் அழைக்கப்படவில்லை என ராதிகா பதிலளித்திருக்கிறார். அது தொடர்பாக மேலும் சிலர் ராதிகாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து அவர்களது பதிவுகளையும் ராதிகா ரீ-ட்வீட் செய்துள்ளார்.

சரத்குமார் ஆதரவாளர்களும் பங்கேற்கவில்லை
சரத்குமார் ஆதரவு நடிகர்களான சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. விஜய், அஜித் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் சென்றுள்ள நிலையில் அவரது மருமகன் தனுஷ் இதுவரை போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமை இல்லை
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இந்த விழாவில் ஒற்றுமை இன்மையால் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை; பலரும் கலந்துகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தின் பிளவுகள் எப்போது தீரும் எனக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











