அஜீத்துக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை!- நடிகர் சங்க பிரஸ் மீட்டில் விஷால்
அஜீத்துக்கும் எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விஷால் கூறினார்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக செய்தியாளர் கூட்டத்துக்கு இன்று நடிகர் சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால், "இந்த நட்சத்திர கிரிக்கெட் மிகச் சிறந்த முறையில், வெற்றிகரமாக நடந்தது. நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விஷயம்.
இந்தப் போட்டியில் வசூலான தொகையில், நடிகர் சங்கத்துக்கு இருந்த அத்தனைக் கடன்களையும் அடைத்துவிட்டோம். இப்போது கைவசம் ரூ 8 கோடி உள்ளது.
நடிகர் சங்கக் கட்டடம் கட்ட மொத்தம் ரூ 28 கோடி தேவைப்படுகிறது. இப்போதுள்ள தொகையைக் கொண்டு கட்டடத்தின் ஆரம்பப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். எனவே மீதிப் பணத்துக்கு நடிகர் சங்கம் சார்பில் படமெடுக்கப் போகிறோம். அந்தப் படத்தில் வரும் பணத்தைக் கொண்டு கட்டட வேலைகளை முழுமையாக முடித்துவிடுவோம்," என்றார்.

அஜீத் விவகாரம்
அஜீத்துக்கும் உங்களுக்கும் இடையே என்ன பிரச்சினை? என்று கேட்டபோது, "அஜீத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர கிரிக்கெட் என்றல்ல.. நடிகர் சங்கத்தின் வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் நீண்ட வருடங்களாக கலந்து கொண்டதே இல்லை. அப்படி இருக்கும்போது, நட்சத்திர கிரிக்கெட்டை மட்டும் வைத்துப் பேசுவது சரியல்ல. மேலும், நாங்கள் யாரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் மீடியாவில் சிலர்தான் நான் சொல்லாதவற்றையெல்லாம் எழுதி பிரச்சினையாக்கிவிட்டார்கள்," என்றார் விஷால்.

தோல்வியா?
நட்சத்திர கிரிக்கெட்டைப் பார்க்க ஆட்களே வரவில்லையே.. அது தோல்விதானே? என்று கேட்டதற்கு பதிலளித்த விஷால், "உண்மையில் மக்களை இந்த நிகழ்ச்சிக்கு திரட்ட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. காரணம் கடைசி மூன்று நாட்கள் இருக்கும்போதுதான் மைதானம் எங்கள் கைக்கு வந்தது. போலீஸ் கெடுபிடி அதிகம். எனவே அதிக விலை டிக்கெட்டுகளை அடித்து, வர முடிந்தோர் மட்டும் வந்தால் போதும் என்று நினைத்தோம்.

சக்ஸஸ்
உண்மையில் நாங்களே எதிர்ப்பாராத அளவுக்கு கூட்டம் கூடிவிட்டது. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க வேண்டும். அது சன் டிவியில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். கூட்டம் பற்றி கவலைப்படவில்லை. அந்த வகையில் நட்சத்திரக் கிரிக்கெட் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது," என்றார்.

கருணாஸ் எங்கே?
இந்த பிரஸ் மீட்டுக்கு நடிகர் சங்கத்தின் இன்னொரு துணைத் தலைவரான கருணாஸ் வரவில்லை. அதுகுறித்துக் கேட்டபோது, "கருணாஸ் அவர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளார். எனவே அவர் வரவில்லை," என்றார் விஷால்.

தேர்தல் நிலைப்பாடு என்ன?
இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, "எங்களுக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை. கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது நடிகர் சங்கம். எங்களுக்கு அனைவருமே வேண்டும். எந்தக் கட்சிக்கு வோட்டுப் போட்டாலும் பரவாயில்லை.. ஆனால் 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும். எனவே அனைவரும் வாக்களியுங்கள்," என்றார்.

தெறி பிரச்சினை
தெறி பட வெளியீட்டில், கலைப்புலி தாணுவின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, "அது தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் தலையிட முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications











