இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாத கதகளி!
விஷாலின் கதகளி படத்தின் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லை என்று விஷால் தெரிவித்தார்.
கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் கருணாஸ், மைம் கோபி, ஆத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாண்டிராஜ்
கதகளி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியது:
கதகளி படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு அனைவரும் இது உங்கள் படம் போல் இல்லையே என்று என்று கேட்கின்றனர். இப்படம் விஷால் அவர்களுக்கு நிச்சயம் புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்படத்தின் கதை நிஜ சம்பவங்களை கோர்வையாக கொண்டது.
இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் மூலம் விஷால் சாரை நான் சந்தித்து கதை சொல்லினேன். விஷால் சாருக்கு நான் இரண்டு கதைகளைக் கூறினேன். முதலாவதாக நான் கூறிய கதை குடும்பபாங்கான ஆக்க்ஷன் படத்துக்கான கதை. விஷாலுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.

இரண்டாவது கதை
பின்னர் அவரிடம் நான் இன்னொரு கதை சொல்கிறேன் என்று கூறினேன். அக்கதையை அவரும் கேட்டார். நான் இரண்டாவதாக சொன்ன கதை விஷாலுக்குப் மிகவும் பிடித்துவிட்டது. இந்த கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார்.

இரண்டே பாடல்கள்
படத்தில் மொத்தமே இரண்டே பாடல்கள் மட்டுமே உள்ளன. முதலில் நாங்கள் படத்துக்காக குத்து பாடல் ஒன்றைச் சேர்த்திருந்தோம். படத்தை பார்த்த பிறகு , படத்தின் இரண்டாம் பாதியில் பாடல்களே தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

விஷாலே சொல்லிட்டார்
படம் சிறப்பாக வந்துள்ளது என்று விஷாலே கூறினார். நாங்கள் படத்தில் இடம் பெற வேண்டாம் என்று நினைத்த வசனங்களைக் கூட விஷால், மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று கூறி படத்தில் அதை இடம் பெற வைத்தார். படத்தில் நாயகி கேத்ரீன் தெரேசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

கதகளி தமிழ் வார்த்தைதான்
நடிகர் விஷால் பேசுகையில், "எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் கதகளி என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர்? நாங்கள் கதகளி என்னும் தலைப்பு தமிழ்தான் என்று தெரிந்த பின்னர் தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம்.

பாடல்கள் இல்லை
நான் முதன் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் உடன் இனைந்து பணியாற்றுகிறேன். இது மிகவும் சிறப்பான கதை. என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. படத்தில் இடம் பெரும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு. படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும்.

எல்லாருமே ஜெயிக்கட்டும்
என்னைப் பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











