நடிகர் சங்க உண்ணாவிரதத்தை படம் பிடிக்க வேண்டாம்! - நாசர்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான உணர்வைக் காட்டவே நடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்பதால், நடிகர் சங்க உண்ணாவிரதத்தை மீடியா படம் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனே நீக்க வேண்டும், உடனடியாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களும் இளைஞர்களும் கடந்த நான்கு நாட்களாக போராட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக திரையுலகமும் களமிறங்கியுள்ளது. இன்று நடிகர் சங்கத்தினர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.
நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம் நடத்துவதால் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறையும் என்பதாலும், மீடியா முழுக்க நடிகர்களைக் கவர் பண்ணுவதில் குறியாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மாணவர்களின் போராட்ட ஒளியை சினிமாக்காரர்கள் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று கமல் உள்ளிட்டோர் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் உண்ணாவிரத நிகழ்ச்சியை மீடியா படம் பிடிக்க வேண்டாம், வீடியோ எடுக்க வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் கேட்டுக் கொண்டார்.
அதன் பேரில், மீடியா கவரேஜ் இல்லாமல் நடிகர் சங்க உண்ணாவிரதம் நடக்கிறது. படங்கள், வீடியோக்களை நடிகர் சங்கமே எடுத்து அனுப்பி வருகிறது.


Click it and Unblock the Notifications











