அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே!
ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் மறைந்த கலை இயக்குநர் ஜி.கே. ரஜினியை அரசியல் மேகம் சூழ்ந்த போதெல்லாம் அவர் கலந்து கொள்ளும் எல்லா விழாக்களிலும் ஜிகேவும் கலந்து கொண்டு தோள் கொடுத்தார்.
அருணாச்சலம் படப்பிடிப்பு நேரத்தில் 'அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா...' பாடல் காட்சிக்காக நடனக் கலைஞர்கள் கூடியிருந்த போது ரஜினி மேக்கப் போட்டு அங்கு வந்திருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து விட்டு 'நடுவில் ஒரு சிவலிங்கம் இருந்தால் பெட்டரா இருக்குமே' என்று ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார்.

இதை சூட்டிங் நடக்க இருக்கும் நேரத்தில் உடனே சிவலிங்கம் கிடைப்பது கஷ்டம். இதை ஆர்ட் டைரக்டராக இருந்த ஜி.கே.விடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே ரஜினியை ஐந்து நிமிடம் கேரவனுக்குள் அமரச் சொல்லியிருக்கிறார். ஐந்து நிமிடம் கழித்து ரஜினி வந்து பார்த்த போது அங்கு அழகான லிங்கம் கம்பீரமாக காட்சியளித்திருக்கிறது.
ஸ்பாட்டில் இருந்த பெரிய அண்டாவை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப் போட்டு கருப்பு பெயிண்ட் அடித்து லிங்கமாக மாற்றியிருக்கிறார் ஜி.கே. என்கிற கலைஞன். இந்த ஐடியாவை பார்த்து ரஜினி உடபட யூனிட்டே கைதட்டி ஜி.கே.வை வாழ்த்தியிருக்கிறது.
இதே அருணாச்சலம் படத்தில் ஜிகே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ரூ 10 கோடி பட்ஜெட்டில் செந்திலை ஹீரோவாக வைத்து எடுக்கும் படத்தின் இயக்குநராக அவர் நடித்திருப்பார்.
- தேனி கண்ணன்


Click it and Unblock the Notifications











