என்டிஆர் பயோபிக்கை 2 பாகங்களாக எடுக்க திட்டம்.. ராம்கோபால் வர்மா ஐடியா என்ன ஆச்சு?
ஐதராபாத் : பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகத் தயாராகி வருகிறது. தேஜா இயக்கும் இந்தப் படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு 'என்டிஆர்' பயோபிக் படத்தின் ஷூட்டிங்கை கடந்த வாரம் தொடங்கி வைத்தார். என்டிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான, அதிரடியான விஷயங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகிறதாம்.

என்டிஆரின் வாழ்க்கை அனைத்தையும் படமாக்கினால் குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஓடும்படியான படம் கிடைக்கும். அதனால் இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க தற்போது திட்டமிட்டு வருகின்றனராம்.
நடிகர் என்டிஆர் தமிழிலும் பல படங்களில் நடித்திருப்பதால் சிவாஜி, எம்ஜிஆர் கேரக்டர்களிலும் இப்படத்தில் சில நடிகர்கள் நடிக்கிறார்கள். அதற்காகவே அவர்களைப் போலவே தோற்றம் கொண்ட நடிகர்களை மேக்கப் போட்டு நடிக்க வைத்து வருகிறார்கள்.
என்டிஆரின் வாழ்க்கை பற்றிய இன்னொரு படத்தை சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்குவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், தேஜா இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பிறகும் எந்த வேலையும் தொடங்காமல் இருக்கிறார் ராம்கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மா இந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தேஜா இயக்கும் படமே இரண்டு பாகங்களாக வெளிவந்தால் ராம்கோபால் வர்மா படத்துக்கு மவுசு இருக்குமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











