நூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
நூறாவது நாள் படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. ஆனால் எங்கள் அனுமதி பெறாமல் படத்தை ரீமேக் செய்ய முயல்கிறார் மணிவண்ணன் மகன் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி நடித்து, மணிவண்ணன் இயக்கிய படம், ‘நூறாவது நாள்.' எண்பதுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகில் படம் அது.
இந்த படத்தை மீண்டும் எடுக்கப் போவதாகவும், அதில் ‘சதுரங்க வேட்டை' புகழ் நட்ராஜ் நடிக்கப் போவதாகவும் இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் கூறியிருந்தார்.

ரகு மணிவண்ணன் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமைதிப்படை 2-ல் பிரதான வேடத்தில் நடித்தார். ‘நூறாவது நாள்' படத்தை ஹாலிவுட் பாணியில், ‘ரீபூட்' என்ற தொழில்நுட்பத்தில் தானே இயக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு ரகு மணிவண்ணன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ‘நூறாவது நாள்' படத்தை தயாரித்த எஸ்.என்.எஸ்.திருமாலின் மகள் ஜே.பத்மாவதி ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "‘மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய 2 படங்களையும் என் தந்தை எஸ்.என்.எஸ்.திருமால் தயாரித்தார் அந்த படங்களின் உரிமைகள் என்னிடம் உள்ளன. இதனை இயக்குநர் மணிவண்ணனே எழுதிக் கொடுத்துள்ளார்.
இப்போது ‘நூறாவது நாள்' படத்தை மீண்டும் இயக்கப் போவதாக ரகு மணிவண்ணன் கூறியிருக்கிறார். இதற்காக, அவர் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும்போது, அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.
இதுதொடர்பாக, ரகு மணிவண்ணனுடன் வேறு யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவர்களும் அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படுவார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











