ஓ "காப்பி" கண்மணியா...???..
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஓகே கண்மணி படம்.
இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, ‘மவுஸ் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள்' எனத் தெரிவித்த கருத்தை, சற்று ஓரம் தள்ளி வைத்து விட்டு நமது ரசிக கண்மணிகள் இப்படம் குறித்த தங்களது விமர்சனங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
என்ன ஆச்சரியம்.. சுஹாசினியே எதிர்பாராத அளவுக்கு பலரும் பாசிட்டிவாக எழுதி வருகின்றனர். ஆனாலும், ஸ்கேனர் கண்களை வைத்துப் பார்ப்போர் வழக்கம் போல இதிலும் ஒரு குற்றம் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஹாலிவுட்டில் வெளியான "பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்" படத்தின் சாயல் தெரிவதை பலரும் கண்டுபிடித்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்...
இந்த இரண்டு படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஓகே கண்மணியைப் போலவே திருமணத்தில் ஈடுபாடில்லாத ஆணும், பெண்ணும் காலப்போக்கில் எவ்வாறு காதலித்தார்கள், பின்னர் கணவன், மனைவி ஆக முடிவெடுத்தார்கள் என்பது தான் பிரண்ட் வித் பெனிபிட்ஸ்-ன் கதையும்.

காதலில்லை... அதுக்கும் மேல
இரண்டு படங்களிலும் காதலிக்காமல், திருமணம் செய்து கொள்ளும் ஆசையில்லாமல் இருவரும் சேர்ந்து ஜாலியாக சுற்றுகிறார்கள். மன ரீதியான உணர்வுகளை ஒதுக்க வைத்து விட்டு, உடல் ரீதியான உறவுக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் நேசிப்பதை உள்ளூர உணர்ந்து கொள்கிறார்கள்.

அல்சைமர்...
பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் படத்தில் நாயகியின் அப்பாவுக்கு அல்சைமர் நோய். அவரைப் பார்த்து நாயகி மீது காதல் கொள்கிறார் நாயகன். ஓகே கண்மணியில் இது உல்டாவாக, நாயகன் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மனைவிக்கு அல்சைமர். தன் மனைவி மீது பிரகாஷ்ராஜ் காட்டும் அன்பைக் கண்டு காதல், மண வாழ்க்கை மீது நாயகன், நாயகி இருவருக்கும் பிடிப்பு ஏற்படுகிறது.

எதுவுமே தப்பில்லை...
இரண்டு படங்களிலுமே திருமணம் செய்து கொள்ளாமல் உறவு கொள்வது தவறில்லை என்கிறார்கள் நாயகனும், நாயகியும். ஆனால், இறுதியில் உண்மையான அன்பில் இணைகிறார்கள்.
"மவுஸ்" பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதை சொல்லித்தான் தீர வேண்டியுள்ளது....காப்பியா.. இல்லை இன்ஸ்பிரேஷனா.. அதை மணிதான் சொல்ல வேண்டும்!


Click it and Unblock the Notifications











