சர்ச்சையின் தத்துப்பிள்ளையாக இருந்த நடிகர் ஓம் பூரி: பிளாஷ்பேக்
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் ஓம் பூரி மனதில் பட்டதை பேசி சர்ச்சையில் சிக்குவதற்கு பெயர் போனவர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஓம் பூரி மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஓம் பூரி சர்ச்சைக்களுக்கு பெயர் போனவர். அவர் எதையாவது பேசி பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

யூரி தாக்குதல்
யூரி தாக்குதல் குறித்து டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓம் பூரி வீரர்களை யார் ராணுவத்தில் சேரச் சொன்னது? ஆயுதங்களை யார் கையில் எடுக்கச் சொன்னது? என்று கேட்டார். அவரின் பேச்சை கேட்ட மக்கள் கொந்தளித்து சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்த்தனர்.

அரசியல்வாதிகள்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடையில் பேசிய ஓம் பூரி, அரசியல் தலைவர் என்ற காரணத்திற்காக ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் படித்த அதிகாரி அவருக்கு சல்யூட் அடிப்பது வெட்கக்கேடு என்று கூறினார்.

ஆமீர் கான்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை, என் குடும்பம் இங்கு வசிக்க பயப்படுகிறது என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தார். அது குறித்து ஓம் பூரி கூறியதாவது, ஆமீரும், அவரது மனைவியும் பயப்படுவது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சகிப்புத்தன்மையின்மை குறித்து ஆமீர் ஓவர் ரியாக்ட் செய்கிறார் என்றார்.

நக்சலைட்டுகள்
நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் அல்ல ஏனென்றால் அவர்கள் பொறுப்பில்லாமல் சாலைகளில் குண்டுகள் வைப்பது இல்லை. அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் ஓம் பூரி.

மாட்டிறைச்சி
நாட்டில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்பவர்கள் நயவஞ்சகர்கள். நாம் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கிறோம் என்று கூறியவர் ஓம் பூரி.


Click it and Unblock the Notifications











