11 வருஷத்திற்கு முன் இதே நாளில்.. ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜித்.. ஆனால், இன்னமும் அன்பு குறையல!
சென்னை: நடிகர் அஜித் குமார் மங்காத்தா படம் வெளியாவதை முன்னிட்டு திடீரென விடுத்த அந்த அதிரடி அறிவிப்பு ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கியது.
ரசிகர் மன்றத்தை கலைத்தால் மட்டும் உங்களுக்கு ரசிகராக இருப்பதை விட்டு விடுவோமா என ஒவ்வொரு ஆண்டும் அஜித்துக்கு பின்னால் ஏகப்பட்ட இளைஞர்கள் அவரது ரசிகர்கள் பட்டாளத்தில் இணைந்து கொண்டே வருகின்றனர்.
வரும் மே 1ம் தேதி அஜித்தின் 51வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் அஜித் வெளியிட்ட அந்த அறிக்கை கடிதத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

51வது பிறந்தநாள்
வரும் மே 1ம் தேதி தனது 51வது பிறந்தநாளை நடிகர் அஜித் கொண்டாட உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கூட வெளியிட வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்த ஆண்டு அஜித் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மங்காத்தா ரிலீஸ் சமயம்
11 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தார். அவர் வெளியிட்ட அறிக்கையை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதில், என்ன கூறியிருந்தார் என்பதை இங்கே காண்போம், "வணக்கம் பல.. அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது.

அஜித் அதிரடி
எனது இந்த திரைப்பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர் நடிகையர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஊடக நண்பர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீண்ட நாட்களாகவே ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

சுயநலத்திற்காக பயன்படுத்தவில்லை
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன் என் ரசிகர்களிடையே எக்காரணத்தைக் கொண்டு வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன்.

அமைப்பு வேண்டாம்
கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இறங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து.

அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்
வருகிற மே 1ஆம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன் இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறி வரும் காலகட்டத்தில் பொது மக்கள் எல்லோரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை அந்த கவுரவமும் எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும் என நடிகர் அஜித்குமார் அதிரடியாக அறிவித்த நாள் இன்று.


Click it and Unblock the Notifications











