பீப் பாடல்: சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு... சென்னை சைபர் கிரைம் போலீஸ் பதிவு
சென்னை : பீப் பாடல் தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தி வெளியான பீப் பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு எதிராக கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாதர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சிம்பு, அனிருத் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த 12-ஆம் தேதி புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு...
இந்தப் புகாரின் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், டிசம்பர் 19-ஆம் தேதி இருவரும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது.

டி.ஆர்...
சிம்பு வெளியூரில் இருப்பதால் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் கேட்டு அவரது தந்தை டி.ராஜேந்தர் போலீஸாருக்கு கடிதம் அனுப்பினார்.

அனிருத்...
இதேபோல, இசையமைப்பாளர் அனிருத் கனடாவில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக 10 நாள்கள் அவகாசம் கேட்டு அவரது தந்தை ரவிராகவேந்தரும் போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதிய வழக்கு...
இந்த சூழ்நிலையில், சிம்பு மற்றும் அனிருத் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பால் முகவர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுச்சாமி அளித்த புகாரின் கீழ், இருவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











