ஒன்... ஒற்றை மனிதனின் சாதனைப் படம்!
வெங்காயம் படம் இயக்கி பாராட்டுகளைப் பெற்ற சங்ககிரி ராச்குமார், அடுத்ததாக ஒன் என்ற பெயரில் ஒரு படம் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தின் அத்தனை வேலைகளையும் அவர் ஒருவரே செய்துள்ளார்.
இந்தப் படம் குறித்து சங்ககிரி ராச்குமார் கூறியுள்ளதாவது:
'வெங்காயம்' திரைப்படம் சினிமா மரபுகளை தாண்டி முழுக்க முழுக்க கிராமத்து மக்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது. தற்போது நான் 'ஒன்' என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
ஒற்றை மனிதனால் யாருடைய உதவியையும் சிறிதும் பயன்படுத்திக்கொள்ளாமல் தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு 'முடியும்' என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.

அனைத்து வேலைகளும்
ஆம், கதை எழுதுவதில் தொடங்கி, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், ஒப்பனை, எடிட்டிங், டப்பிங், க்ராபிக்ஸ், இசை உட்பட ஒரு திரைப்படம் உருவாக தேவையான அனைத்து துறை வேலைகளையும் தனி ஒருவனாகவே செய்து முடித்திருக்கிறேன்.
அதை நிரூபிக்கும் வகையில், நான் வேலை செய்த அனைத்தையும் தொடக்கம் முதல் இறுதி வரை மற்றொரு மேக்கிங் கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

ஒரே ஒரு நடிகர்தான்
ஒரே நபரால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு. அனைத்து கதாபாத்திரங்களிலும் நானே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறேன். வயதான தோற்றம் உட்பட சில கதாபாத்திரங்களை மோசன் கேப்சர் முறையில் செய்திருக்கிறேன்.
இதற்காக ஒகேனக்கல், தலக்கோனம் போன்ற அடர்ந்த காடுகளிலும், இமயமலை பனிப் பிரதேசங்களிலும் தனியாக தங்கியிருந்து படப்பிடிப்பு செய்தேன். இதன் க்ளைமேக்ஸ் காட்சியை அமெரிக்காவில் எடுத்து முடித்தேன்.

4 ஆண்டுகள்
3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டு, தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ய நேர்ந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் 4 ஆண்டுகள் ஆனது. எனினும் இந்தியாவிலே முதல் முயற்ச்சியாக இப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருப்பது பெரும் மன நிறைவைத் தருகிறது.

வெங்காயம் தந்த விழிப்புணர்வு
தமிழக அளவில் 'வெங்காயம்' படம் முன்னுதாரனமாக அமைந்ததைப் போல, இந்திய அளவில் இந்தப் படம் பல சுதந்திர பிலிம் மேக்கர்கள் உருவாக தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.
இந்த முயற்சிக்கான நோக்கம், வெங்காயம் படத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, இந்தப் படத்திலும் மக்களுக்குத் தேவையான முக்கியமான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
விரைவில் திரையில்
இதைப்போல வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் மக்களை எளிமையாக சென்றடைகின்றன. ஆகவே 4 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பிறகு இப்படம் பெரும் நிறைவாக வந்திருக்கிறது. விரைவில் திரையிட திட்டமிட்டிருக்கிறேன்.
-சங்ககிரி ராச்குமார்


Click it and Unblock the Notifications











