'இணைய தள ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க தலைவா!' - ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை
ரசிகர்களுடன் சந்திப்பு உறுதி என ரஜினி அறிவித்ததுமே, தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பாகங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். ஒரு திருவிழாவுக்குத் தயாராகும் மன நிலையில் உள்ளனர்.
இன்னொரு பக்கம் இணையதளங்களில், சமூக வலைத் தளங்களில் ரஜினியின் புகழ்பாடும் ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 11 முதல் 16-ம் தேதி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளார். அதுகுறித்து மன்ற நிர்வாகிகளை வரவழைத்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி தலைமை மன்றத்தில் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள்.
பழைய மன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களை மட்டும்தான் அழைக்கப் போகிறார்களா? அல்லது அதன் பிறகு பல மடங்கு பெருகிவிட்ட, ஆனால் உறுப்பினர் அட்டை இல்லாத ரசிகர்களையும் அழைக்கப் போகிறார்களா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது.
புதிய ரசிகர் மன்றங்களைத் தொடங்குவதை நிறுத்துமாறு ரஜினி உத்தரவிட்டு இருபதாண்டுகளுக்கு மேலாகிறது. பழைய ரசிகர்கள் பலர் ஆக்டிவாக இல்லாத நிலையில், ரஜினியின் புதிய படங்களின் வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்வதும், இணையத்திலும் பொது வெளியிலும் ரஜினி குறித்து எழும் எதிர்ப்புக் கருத்துக்களுக்கு சாட்டையடியாக பதில் கொடுப்பதும் இந்த புதிய, இளைய தலைமுறை ரசிகர்களே. ஆனால் இவர்களுக்கு உறுப்பினர் அட்டை இல்லாததால், நம்மை அனுமதிக்க மாட்டார்களோ என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.
மன்றங்கள் முழுக்க முழுக்க பழைய வயதான ரசிகர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களை அணுகி இதுகுறித்துப் பேசவும் முடியவில்லை என்கிறார்கள் இந்த ரசிகர்கள்.
தங்கள் ஆதங்கம், கோரிக்கையை ஒரு அறிக்கையாகவே தயார் செய்து, மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இணையதள ரசிகர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா?


Click it and Unblock the Notifications











