ஆஸ்கருக்கு நாம் ஏன் ஆசைப்பட வேண்டும்? - நாசர் கேள்வி
ஈரோடு: ஆஸ்கர் என்பது அமெரிக்க நாட்டில் அந்த நாட்டு கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது. அதை வாங்க நாம் ஏன் ஆசைப்பட வேண்டும், என்று நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நடிகர்கள் ராஜேஷ், நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆஸ்கர்
அப்போது வாசகர்களிடம் நடிகர் நாசர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நாசர் பேசுகையில், "நம் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் அதிகமாகப் பேசும் விஷயம் ஆஸ்கர் விருது. முதலில் இதில் ஒரு தெளிவு வேண்டும். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு அமெரிக்க அரசு கொடுக்கும் விருதுதான் ஆஸ்கார் விருது.

நாமதான்...
வெளிநாட்டை சேர்ந்த சினிமா நடிகர்கள் யாராவது தனக்கு இந்திய நாட்டின் விருது கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களா? இல்லையே. பிறகு ஏன் நாம் மட்டும் ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும்? எனக்குத் தெரிந்து நம்மைப்போல ஆஸ்கருக்கு ஆசைப்படும் வெளிநாட்டினரை எங்கும் பார்க்க முடியாது.

சிவாஜிக்கே விருது கிடைக்கல
சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தவர் சிவாஜி கணேசன். அவருக்கே நம் நாட்டில் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை. தற்போது நடிப்பு பற்றி 4 ஆண்டுகளாக ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். இது நாளைய சமுதாயம் பயன்பெறும் வகையில் இருக்கும்.

பெயர் மாற்ற மறுத்தேன்
ஒருமுறை இயக்குனர் பாலசந்தர் என்னை அழைத்து நாசர் என்ற பெயர் மிக சிறியதாக இருக்கிறது. பெயரை மாற்றிவிடலாமா? என்று கேட்டார். ரஜினி போன்றோருக்கு பெயர் வைத்து வாழவைத்த சிகரம் பாலசந்தர். ஆனால் அவரிடம் நான் என் பெற்றோர் ஆசையுடன் வைத்த பெயரை மாற்ற விரும்பவில்லை என்று தாழ்மையுடன் கூறினேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











