'திரையிடமாட்டோம்..' தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம்
சென்னை: திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பால், ஈஸ்வரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஈஸ்வரன். கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது.
இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின்.

நந்திதா ஸ்வேதா
மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த், பிச்சைக்காரன் மூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பாடல் வெளியீடு
படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை மாதவ் மீடியா சார்பில், பாலாஜி கப்பா அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
படத்தின் டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் ஓடிடி
ரிலீஸ் பரபரப்பில் ஈஸ்வரன் படக்குழு இருந்த நிலையில், தமிழ்நாட்டு தியேட்டர்களில் ஈஸ்வரன் வெளியாகும் அன்றே, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெளியிட மாட்டோம்
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், ஈஸ்வரன் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டால், தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று கூறினார். இதனால் சினிமா துறையில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈஸ்வரன் பட தயாரிப்பாளர், ஓடிடி ரிலீஸை நிறுத்துவதாக அறிவித்தார்.

நிறுத்தி வைக்கிறோம்
'தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க வேண்டுகோளின்படி தியேட்டர் அனுபவத்தை ஒதுக்கிவிட முடியவில்லை. ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் ஓடிடி மூலம் வெளியிடுவதாக நாங்கள் எடுத்த முடிவை நிறுத்தி வைக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு மேலும் தியேட்டர்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











