Bison : பைசனுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு.. முத்தங்களை மாறி மாறி கொடுத்துக் கொண்ட ரஞ்சித் - மாரி!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா, பசுபதி, லால், அமீர், பவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால், மாரி செல்வராஜும் இயக்குநர் பா. ரஞ்சித்தும் கட்டிப்பிடித்து எமோஷனலாகி மாறி மாறி முத்தங்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
பைசன் - காளமாடன் படம் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அளவிலான கபடி வீரராக உயர்ந்து, இந்திய அணிக்காக விளையாடி கோப்பைகளை வென்று கொடுத்தவர் கபடி வீரர் கணேசன். இவர் சிறந்த கபடி வீரராக திகழந்ததால் அவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இப்படி இருக்கையில், அவரது வாழ்க்கை வரலாற்றை கதை கருவாகக் கொண்டு சில புனைவுகளுடன் உருவாக்கப்பட்ட படம் தான் பைசன்.

துருவ் விக்ரமின் ஈடுபாடு: இந்த படத்திற்காக துருவ் விக்ரம் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக, கபடி வீரர் மணத்தி கணேஷிடம் கபடி பயிற்சி பெற்றுள்ளார். அவரது கடின உழைப்பு என்பது திரையில் நேர்த்தியாக தெரிகிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் மேலும் அதிகரிக்கச் செய்தது, நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்கள் தான். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே ஹிட் தான் என்றாலும் திரையில் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருந்த பாடல் என்றால், காளமாடன் கானம் பாடலைத்தான் எனலாம்.
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு: இப்படி இருக்கையில் இன்று படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படம் நேற்றே சென்னையில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்தவர்கள் படத்தை கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று காலையில் படம் பார்த்த ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். சென்னை ரோகிணி திரையரங்கில் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்கள். ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தையும் ஆதரவையும் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்திருந்த படக்குழுவினரை, வரவேற்க காத்திருந்தார், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா. ரஞ்சித்.

முத்த மழை: படம் முடிந்ததும் வெளியே வந்த மாரி செல்வராஜை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சந்தோஷத்தில் மாரி செல்வராஜ் பா. ரஞ்சித்துக்கு முத்தம் கொடுக்க, பா. ரஞ்சித்தும் எமோஷனலில் மாரி செல்வராஜ்க்கு முத்தம் கொடுத்தார். இவர்கள் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மொத்த படக் குழுவினரையும் பா. ரஞ்சித் வரவேற்றார். படம் பார்த்த அனுபமா பரமேஸ்வரன் கிளைமாக்ஸ் காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தை பார்த்து, கண்கள் கலங்கி விட்டார். படக்குழுவினருடன் இணைந்து படம் பார்க்க படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரமின் தந்தையும் நடிகருமான சியான் விக்ரம் ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











