Pa. Ranjith: அரசியலில் கால் பதிக்கும் பா. ரஞ்சித்.. புதிய கட்சி தொடங்கப் போகிறாரா? மாரி செல்வராஜ் ஓபன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் சமூகத்தில் தொடர்ந்து தாக்கத்தை, விவாதத்தை ஏற்படுத்தி வருகிறார். பா. ரஞ்சித் தான் எதிர்கொள்ளும் அனைத்திலும் அரசியல் பார்வையில் அணுகுவது மட்டும் இல்லாமல், அதை வெளிப்படுத்தவும் செய்கிறார். குறிப்பாக அவர் மீக தீர்க்கமாக நம்புகிற பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலை தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் அவர் விரைவில் தேர்தல் அரசியலிலும் களமிறங்குவார் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தனது முதல் படமான அட்டக்கத்தி படத்தில் தொடங்கி கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, வாழ்வியலை, மொழியை, அவர்களுக்கான அரசியலை, அவர்களின் வரலாற்றை என தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். தலித் அரசியல் படங்கள் எல்லாம் இங்கு வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா என்ற கேள்விக்கு, தீர்க்கமான வெற்றியைப் பெறும் என்பதை தொடர்ந்து நிரூபித்தே வருகிறார்.

படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், தனது வருமானத்தின் மூலம் அவர் முதன் முதலில் தொடங்கியது, நீலம் பண்பாட்டு மையம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் நூலகங்கள், தலைநகர் சென்னையில் கூகை நூலகம் என்பவைதான். அதன் பின்னர் வானம் என்ற கலைத்திருவிழாவை தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். நீலம் சோசியல், நீலம் எண்டெர்டைன்மெண்ட் என்ற இணைய ஊடகங்களையும், நீலம் மாத நாளிதழையும் நடத்தி வருகிறார்.
சமூகப் பணி: இவற்றில், மெயின் ஸ்ட்ரீம் மீடியா என்ற வரையறைக்குள் இருக்கின்ற செய்தி நிறுவனங்கள் பெரிதும் கண்டுகொள்ளாத, தலித் பிரச்னைகள், தொழிலாளர்களின் உரிமை சார்ந்த பிரச்னைகள், பெண்களின் உரிமை சார்ந்த பிரச்னைகள் என பலவற்றை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறார்கள். நீலம் புரெடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி, பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

ரஜினி சொன்ன ஸ்டேட்மெண்ட்: சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை இயக்கினார் ரஞ்சித். இதில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, தனது வாழ்க்கையை இயக்குநராக மட்டும் பா. ரஞ்சித் முடிக்க மாட்டார். அவர் கட்டாயம் தான் சார்ந்த சமூகத்திற்காக ஏதாவது செய்வார் என்று தெரிவித்தார். ரஜினி இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படி இருக்கும்போது அவரது தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பைசன் - காளமாடன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரசியலில் பா. ரஞ்சித்: இப்படி இருக்கும்போது இந்த படத்தின் புரோமோசனின் போது இயக்குநர் பா. ரஞ்சித் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாரி செல்வராஜ், " நானும் இதே கேள்வியை அவரிடம் கேட்டிருக்கிறேன். அவரின் புன்சிரிப்பு தான் அதற்கான பதிலாக இருக்கும்; நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார்; அதற்கான முழு தகுதி உடையவர். அவர் எதற்கும் பயப்பட மாட்டார்; களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்; கண்டிப்பாகக் களத்தில் இறங்குவார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றுவாரா? இல்லை புதிய கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்விகள் தற்போது உலா வரத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











