சாதி எதிர்ப்பை சொந்த வாழ்வில் பரிசோதனை செய்ய வேண்டும்.. பெரியார் பிறந்தநாள்.. பா. ரஞ்சித் ட்வீட்!
சென்னை: பெரியாரின் 142வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் என ஏகப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைகளுக்கும், புகைப்படங்களுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சினிமாவில் தனது படங்கள் மூலம் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சீரிய கருத்துக்களை எடுத்து உரைத்து வரும் இயக்குநர் பா. ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

142வது பிறந்தநாள்
ஈரோடு வெங்கட்டப்ப ராமசாமி என்பதை சுருக்கமாக ஈ.வெ.ரா என்றும், மரியாதை செலுத்தும் விதமாக பெரியார் என்றும் அழைத்து வருகின்றனர். கடவுள் மறுப்பு கொள்கை, பகுத்தறிவு சிந்தனை, கள்ளுக்கடை மறியல், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டம் என ஏகப்பட்ட போராட்டங்களை நடத்திய பெரியாரின் 142வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பெரியார் குறித்த பாடங்கள்
சுதந்திர போராட்ட வீரராகவும், சுய மரியாதை போராட்ட வீரராகவும் இருந்த வைக்கம் வீரர் பெரியார், சாதி, மதங்களை கடந்து மனிதம் வாழ வேண்டும் என ஏகப்பட்ட சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கூறியுள்ளார். மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே பெரியாரின் நற் சிந்தனைகள் சென்று அடைய வேண்டும் என பாட புத்தகங்களிலேயே பெரியாரின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

சினிமா படங்கள்
அதே போல சினிமாவிலும் பெரியார் கொள்கைகளை ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பின் பற்றி வருகின்றனர். பெரியார் கொள்கைகளில் மிகவும் பற்றுள்ள நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஞான சேகரன் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு பெரியார் எனும் படத்தில் பெரியாராகவே நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரியாரை நினைவு படுத்தினார்.

பா. ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித்தும் தான் இயக்கிய படங்களில் சாதி பிரச்சனைகளையும், கீழ் சாதி மேல் சாதி பாகுபாடு நீங்க வேண்டும் என்றும் காட்சிகளை அமைத்து வருகிறார். ரஜினியை வைத்து அவர் இயக்கிய காலா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கருப்பு சட்டை கருப்பு வேட்டி கட்ட வைத்து பெரியார் சிந்தனைகளையும் அடுக்கி வைத்திருந்தார்.
Recommended Video

பா. ரஞ்சித் ட்வீட்
இந்நிலையில், பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் பா. ரஞ்சித், "பெரியார் விரும்பிய சாதிமத பேதமற்ற சமத்துவத்தை முன்பு எப்போதையும் விட மிக அதிகமாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம்இருக்கிறோம். அவர் முன்மொழிந்த சாதிஎதிர்ப்பை சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு சுயபரிசோதனை செய்கிறோம் என்பதில்தான் விடியலை நோக்கிய பாதை இருக்கிறது. வாழ்க பெரியார்." என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











