சர்ச்சையைக் கிளப்பிய 'பத்மாவத்' ரிலீஸ் தேதி அறிவிப்பு... தமிழ் ட்ரெய்லர் வெளியானது!
மும்பை : சரித்திரப் படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவத்' படத்தில் ரன்வீர் சிங், சாஹித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
'பத்மாவத்' படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், படத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பால் 'பத்மாவதி' என்றிருந்த டைட்டில் 'பத்மாவத்' என பெயர் மாறியிருக்கிறது.
'பத்மாவத்' படம் வரும் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பத்மாவத் ரிலீஸ்
'பத்மாவத்' படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற ஜனவரி 25-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

பத்மாவதி சர்ச்சை
ரன்வீர் சிங், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் 'பத்மாவதி' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனித்தனியாக வெளியிடப்பட்டது. இப்படத்தின் டீசர் வெளியானதும் பெரும் சர்ச்சை கிளம்பியது.

கொலை மிரட்டல்
'பத்மாவதி' படத்தில் ராணி பத்மினி பற்றிய தவறான கருத்துகள் இடம்பெறுவதாகக் கூறி ராஜபுத்திரர்கள் அமைப்பினர் படத்தைத் திரையிட எதிர்ப்புத் தெரிவித்தனர். படம் நிச்சயம் வெளியாகும் எனக் கூறிய தீபிகா படுகோனேவின் தலையை வெட்டினால் 5 கோடி பரிசு என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ரிலீஸ் தாமதம்
பத்மாவதி படத்தின் ஷூட்டிங் முடிந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த டிசம்பர் மாதமே படம் ரிலீஸாக வேண்டியது. ராஜபுத்திர அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு படத்திற்கு சென்சார் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதனால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

திரையிட தடை
படத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.

டைட்டில் மாற்ற வேண்டும்
இந்நிலையில், படத்தில் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்க வேண்டும், 'பத்மாவதி' என்ற பெயருடன் ரிலீஸாகாமல் 'பத்மாவத்' என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் மற்றும் படத்தில் மூன்று முறை ஒரு விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என சென்சார் போர்டு அறிவுறுத்தியது.

அடுத்த வாரம் ரிலீஸ்
இந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஒப்புக்சொன்னால் யு/ஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு பரிந்துரை செய்தது. சென்சார் போர்டின் இந்த நிபந்தனைக்கு படக்குழு ஒப்புக்கொண்டு, டைட்டிலையும் மாற்றி படத்தை வெளியிட இருக்கின்றனர்.

நீடிக்கும் சிக்கல்
இன்னும் சில மாநிலங்களில் எதிர்ப்பும், தடையும் நிலவி வருவதால், இந்தியில் படம் வெளியிடும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் 'பத்மாவத்' தடை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.

தமிழில் ரிலீஸ்
தமிழில் 'பத்மாவத்' என டைட்டில் மாற்றப்பட்ட திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











