அவரே களத்துல இறங்கிட்டாரா? அப்ப சரியாத்தான் இருக்கும்...!!
இன்று வெளிவரும் தமிழ் படங்களின் டைட்டில்களை கவனித்தாலே டைட்டிலுக்கு எவ்வளவு வறட்சி என்பது புரியும். ஒரு வித்தியாசமான டைட்டில் அமைந்து அது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தாலே படம் ஹிட் என அடித்து சொல்லலாம். அப்படித்தான் ஒரு படத்துக்கு பகிரி என பெயர் வைத்துள்ளார்கள். அது என்ன பகிரி?
வாட்ஸ் அப்பைத்தான் பகிரி என தமிழ்ப்படுத்தி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன். சிலர் இதையே கட்செவி அஞ்சல் எனத் தமிழ்ப் படுத்தியிருந்தாலும், அதை விட எளிமையாக செய்திகளைப் பரிமாறும் செயலி என்பதைச் சொல்லும் வகையில் பகிரி என மாற்றியுள்ளார்.

கார்வண்ணன் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் சொந்த வாழ்க்கை தந்த அனுபவத்தாலேயே இயக்குநர் ஆனவர். வாட்ஸ் ஆப் அதாவது இயக்குநர் மொழியில் பகிரி என்றாலே நம்மிடம் இருக்கும் தகவலை பகிர்ந்துக்கொள்ளுதல் தானே? அப்படி படத்தில் வரும் முக்கிய கேரக்டர்கள் தங்கள் அனுபவங்களை பகிருந்துகொள்வதாலேயே பகிரி என்று பெயர்.
சரி என்ன சொல்கிறது பகிரி?
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று தனித்தனி ஆசைகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளுடன் தான் இந்த சமூகத்தை அணுகுகிறார்கள். ஆனால் சமூகம் நம் ஒவ்வொருவருக்கும் என்ன திணிக்கிறது என்பதுதான் வாழ்க்கை. அதுதான் பகிரியில் பேசப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் ஏதோவொரு சுயநலம் அடங்கியிருக்கிறது. ஏன் காதலே ஒருவகையில் சுயநலம் தான் என்று புது விளக்கம் தருகிறார்.
ஆழ்ந்து யோசித்தால் அட..உண்மைதானே? என்றுதான் தோன்றுகிறது.

யாரிடமும் உதவி இயக்குநராக இருந்த அனுபவம் இல்லை என்றாலும் இசக்கி கார்வண்ணன் படத்தில் ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபிகஜேந்திரன், மாரிமுத்து, பாலசேகரன் என பல அனுபவம் வாய்ந்த இயக்குநர்களை இயக்கியிருக்கிறார்.

எல்லாம் சரி, படம் எடுக்க துணிச்சல் வேண்டுமே? அதை யார்கொடுத்தது? ஒளிப்பதிவாளர் செழியன். பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் இயக்குநருக்கு நண்பராம். கதையைக் கேட்ட அவர்தான் பக்கபலமாக இருந்து படத்தை முடித்துக்கொடுத்துள்ளார். செழியன் எடுத்து செய்த புராஜக்ட் என்றால் ஏதோ உள்ளே விஷயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்!


Click it and Unblock the Notifications











