'பையன்... வாழ்வியலைச் சொல்லும் மாற்று சினிமா'!- ஒரு இயக்குநரின் தன்னம்பிக்கை
எத்தனைப் படம் பார்த்தாலும் கிராமத்துப் பின்னணியில் அமைந்த படங்களைப் பார்ப்பதே தனி சுகம். அதுவும் களவாணி, கத்துக்குட்டி மாதிரி படங்கள் சுவையான அனுபவங்கள்.
அந்த வரிசையில் இப்போது ஒரு புதிய படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தலைப்பு: பையன்.

ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். ‘பசங்க' சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன், சித்தன் மோகன், வடிவுக்கரசி, செந்தி, சுரெஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.ராகுல் இசையமைக்க, பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்க, சேவியர் திலக் படத்தொகுப்பு செய்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக் கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

வழக்கமான படம் என்பதைத் தாண்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர் பாலு மலர்வண்ணன். இயல்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு மாற்று சினிமாவாக, வாழ்வியல் படமாக இருக்கும் என்கிறார் பாலு மலர்வண்ணன்.
"பெற்றோரைப் விட்டு பிரிந்து நிற்கும் பெரிய மனிதத்தனம், காதல் முளைக்கும் காலம், நட்பின் புரிதல்கள், தன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படும் சுயம் என்றெல்லாம் ஒரு பையன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன். இது படம் பார்ப்பவர்களுக்கு தங்களது அனுபவத்தை திருப்பப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும்," என்கிறார் பாலு மலர்வண்ணன்.


Click it and Unblock the Notifications











