பாக். கலைஞர்களை நடிக்க வச்சுப் பாருங்க, அப்புறம் இருக்கு வேடிக்கை: இயக்குனருக்கு மிரட்டல்
மும்பை: பாலிவுட் இயக்குனர் கரணுக்கு சவால் விடுகிறோம். அவர் தன்னுடைய படத்தில் ஒரு பாகிஸ்தான் கலைஞரை நடிக்க வைக்கட்டும், அதன் பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்று மட்டும் பாருங்கள் என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா மிரட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 18 பேர் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் நம் வீரர்கள் 18 பேரை இழந்துள்ளோம்.
இந்நிலையில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி மும்பையில் தங்கியுள்ள பாகிஸ்தானிய நடிகர், நடிகைகளை மிரட்டியது.

48 மணிநேர கெடு
மும்பையில் தங்கியுள்ள பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகள் 48 மணிநேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லை என்றால் வெளியேற்றுவோம் என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா எச்சரிக்கை விடுத்தது.

பவாத் கான்
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் மிரட்டலை அடுத்து மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகரான பவாத் கான், மாஹிரா கான் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

எம்.என்.எஸ்.
கெடு விதித்த பிறகு மும்பையில் இருந்த பாகிஸ்தான் கலைஞர்கள் வெளியேறிவிட்டனர். யாராவது மறைந்து கொண்டிருந்தால் அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தெரிவித்துள்ளது.

ரித்தேஷ் தேஷ்முக்
நடிகை ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் ராஜ் தாக்கரே கட்சியின் செயலால் கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எப்பொழுதும் கலைஞர்களையே குறி வைப்பது துரதிர்ஷ்டவசமானது. இது பிரச்சனைக்கு தீர்வாகாது என்றார்.

கரண் ஜோஹார்
கலையை அரசியலோடு தொடர்புபடுத்தக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார். இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி தலைவர் கோப்கர் கூறுகையில், கரணுக்கு சவால் விடுகிறோம். அவர் தன்னுடைய படத்தில் ஒரு பாகிஸ்தான் கலைஞரை நடிக்க வைக்கட்டும், அதன் பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











