ஆன்லைனில் பாபநாசம்... அதிர்ச்சியில் கமல்!
பாபநாசம் படம் வெளியாகி நான்கு நாட்களே ஆன நிலையில் அந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால், கமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்துள்ள பாபநாசம் படம், தமிழகமெங்கும் ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் முழு வடிவமும் துல்லிய பதிப்பாக ஆன்லைனில் வெளியாகியிருப்பது பாபநாசம் படக்குழுவினரை அதிர வைத்துள்ளது.

படம் வெளியான இரண்டே நாளிலேயே ஆன்லைனுக்கு வந்துவிட்டதாம். நான்காவது நாள்தான் இந்த உண்மை படக்குழுவுக்குத் தெரிந்துள்ளது.
முழு பாபநாசம் படமும் இணையத்தில் டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியாகியதை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்க கமல் முடிவெடுத்துள்ளார்.
இதுபற்றி இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறும்போது, இணையத்தில் படம் வெளியாகியுள்ளது எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுபற்றி கமலிடமும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடமும் விவாதித்துள்ளேன். கமலும் தயாரிப்பாளரும் தமிழக காவல்துறையில் இன்று புகார் செய்யவுள்ளனர்.
இணையத்தில் படம் வெளியாவதைத் தடுக்க தனியார் நிறுவனங்களின் உதவியையும் நாடியுள்ளோம். அவர்களால் இணையத்தில் வெளியாவதைத் தடுக்கமுடியுமே தவிர கைது பண்ணமுடியாது. இதைச் செய்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து சினிமாவைக் காப்பாற்றவேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











