அதிர்ச்சி.. பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகன் கதிரின் அப்பாவாக நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் சற்றுமுன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெருக்கூத்து கலைஞராக ஏகப்பட்ட நாடகங்களில் நடித்து கிராமப்புற மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நெல்லை தங்கராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படம் பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருப்பார்.
ஏழ்மை நிலையில் இருந்து வந்த நெல்லை தங்கராஜுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சமீபத்தில் வீடு கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை தங்கராஜ் காலமானார்
பிரபல தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏழ்மை உடன் போராடி வந்த நிலையில், உடல்நலக் குறைவும் நெல்லை தங்கராஜை போட்டு வதைத்து வந்த நிலையில், அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெருக்கூத்து கலைஞர்
நெல்லையை சேர்ந்த தங்கராஜ் சிறு வயதில் இருந்தே தெருக்கூத்து கலைஞராக தனது கலையை பல்வேறு ஊர்களுக்கு சென்று நாடகங்கள் போட்டு வளர்த்து வந்தார். நெல்லை தங்கராஜ் என்றாலே நாடக கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்த நிலையில், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவிலும் நெல்லை தங்கராஜ் அறிமுகமானார்.

பரியேறும் பெருமாள் படத்தில்
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான பரியேறும் படத்தில் ஹீரோ கதிரின் அப்பாவாக நெல்லை தங்கராஜ் வித்தியாசமான ரோலில் நடித்திருப்பார். பெண்ணாக கூத்துக் கட்டும் கலைஞர் மகனை பார்க்க கல்லூரிக்கு வரும் போது அவரது வேட்டியை உருவி மானபங்கம் படுத்தும் காட்சிகள் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை அருவியாக கொட்ட வைத்திருக்கும்.

வீடு கட்டித் தந்தாங்க
வறுமையில் வாடி வந்த உன்னதமான தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜுக்கு சமீபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து சமீபத்தில் வீடு கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீட்டிற்கு முன் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

ரசிகர்கள் இரங்கல்
ஆனால், அதற்குள் நெல்லை தங்கராஜ் அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியாமல் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக காலமான செய்தி சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











