'கோடிட்ட இடங்களை நிரப்புக'... சாந்தனுவை ரகசியமாகக் கண்காணித்த பார்த்திபன்!
தன் குருவுக்கு நன்றிக் காணிக்கையாக அவரது மகன் சாந்தனுவை வைத்து கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை இயக்கியுள்ளார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
இந்தப் படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் 'டமுக்காட்லான் டுமுக்காட்டலான்' பாடல், நடிகர் தனுஷ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து சாந்தனு கூறுகையில், "பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, 'நான் கோடிட்ட இடங்களை நிரப்புக' என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு' என்று கூறினார். ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தரமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











