பாஸ்போர்ட் வழக்கு: குஷ்புவுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுரை
சென்னை: மூன்று கிரிமினல் வழக்குகள் இருப்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட மறுக்கப்பட்டதை எதிர்த்து நடிகை குஷ்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சட்டசபை தேர்தலின்போது நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்குகளை காரணம் காட்டி குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு குஷ்புவுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
குஷ்புவின் பாஸ்போர்ட் 2022ம் ஆண்டு வரை செல்லுமாம். அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட தாள்கள் இல்லாததால் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றாராம். பாஸ்போர்ட் பிரச்சனைக்கு பின்னர் அரசியல் உள்ளதாக குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள், 25 ஆண்டுகளாக வரி செலுத்தும் நான் நாட்டை விட்டு ஓடியாப் போகப் போகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


Click it and Unblock the Notifications











