பாவனிக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா இல்லையா... விளக்கிய சகோதரி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
பாவனி ரெட்டியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடங்கி, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது என பல வகையான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எது உண்மை, எது பொய் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

உண்மையை பகிர்ந்த பாவனி
இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கை பற்றி சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிந்து கொள்ளும்படி சொல்ல வேண்டும் என்ற பிக்பாஸ் டாஸ்கில், நேற்று பாவனி ரெட்டி தனது கடந்த கால வாழ்க்கை பற்றியும், கணவர் தற்கொலை செய்து கொண்ட அன்று என்ன நடந்தது என்றும் வெளிப்படையாக கூறினார்.

இரண்டாவது திருமணம் நடந்ததா
அப்போது தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றொர் முயற்சி செய்ததாகவும், மீண்டும் காதல் வந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்ததாகவும், ஆனால் சரி வராததால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் பாவனி ரெட்டி கூறினார். ஆனால் ஏற்கனவே மீடியாக்களில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவியது.

விளக்கம் தந்த சகோதரி
இதனால் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதா, இல்லையா என்பது பற்றி பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மூத்த சகோதரி சிந்து, மிக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். அதில், பாவனி பற்றியும் அவள் உறவுகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும், சர்ச்சைகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன்.

கணவரின் நினைவில் வாழ்ந்த பாவனி
பாவனி அவளது கணவர் ப்ரதிப் குமாரின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளவில்லை. பாவனி அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியினராகத் தான் இருந்தனர். அவர் மறைவிற்குப் பிறகும் அவரின் நினைவுகள் அவளைவிட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளே.

பிரிந்து சென்ற காதலர்
ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர்.

ஆதரவு தாருங்கள்
அவள் கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக் கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார். எனவே அனைத்து ஊடக பணியாளர்களும், ரசிகர்களும் மற்றும் அவளுடைய நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் உண்மையில்லை
மீடியாக்கள் மூலம் நீங்கள் அறிவது எல்லாம் உண்மையில்லை என்ற கேப்ஷனுடன் பாவனி ரெட்டியின் சகோதரி சிந்து வெளியிட்டுள்ள இந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். பாவனி பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ரசிகர்கள் பலர் கேட்டு கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











