"தாசியை ஒழிக்கணும்னு சொன்னா பத்தினிக்கு ஏன் கோபம் வருது".... பழ.கருப்பையா கேள்வி!
சர்கார் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா தமிழக அமைச்சர்களை கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் கூட உத்தமர் இல்லை என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அதிர வைத்திருப்பவர் பழ.கருப்பையா. மூத்த அரசியல்வாதியான இவர், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியவர்.
சர்கார் திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கக்கூடிய இந்த சூழலில், இத்திரைப்படம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பழ.கருப்பையா பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது,

மோசமான அரசியல்வாதி:
" முருகதாஸின் உதவியாளர் முதலில் இந்த கதையை சொன்ன போது, மோசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினேன். பின்னர் முருகதாஸ் நேரில் வந்து கதையை சொன்ன போது சம்மதம் தெரிவித்தேன்.

மக்கள் மீது அக்கறை:
விஜய் ஒரு துறுதுறுப்பான இளைஞர். நம் மக்கள் மீது அதிக அக்கறை வைத்திருக்கிறார். தற்போது அவருக்கு பணம் சம்பாதிப்பதில் எல்லாம் பெரிய நாட்டம் இல்லை. தன்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்த மக்களுக்கு ஏதாவது திருப்பித் தர வேண்டும் என நினைக்கிறார்.

அரசியலுக்கு வருவார்:
நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார். நடிகர்கள் பலர் வயதான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர் விறுவிறுப்பாக இருக்கும் போதே அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறார். அது தான் என்னை வியக்க வைக்கிறது.

இலவசங்கள் வேண்டாம்:
சர்கார் படத்தில் சொன்ன கருத்துகளில் எந்த தவறும் இல்லை. இயக்குனர் முருகதாஸ் தைரியமாக பல கருத்துகளை சொல்லியிருக்கிறார். தேவையில்லாத கவர்ச்சிகரமான இலவசங்கள் வேண்டாம் என்பது தான் எனது நிலைபாடும். காமராஜர் கொண்டு வந்தது போல் பயனுள்ள இலவசங்கள் தான் அவசியமானது.

கேள்வி:
இங்குள்ள ஒரு அமைச்சர்கூட உத்தமர் இல்லை. அதனால் தான் சர்கார் படத்தை பார்த்து அவர்களுக்கு கோபம் வருகிறது. தாசியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் பத்தினிக்கு ஏன் கோபம் வரவேண்டும்?" என இவ்வாறு பழ.கருப்பையா அப்பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











