"பென்சில்".... திருட்டு சிடியால் கோடிக்கணக்கில் நஷ்டம்- ஜி.வி.பிரகாஷ்
சென்னை: 'பென்சில்' படத்தின் திருட்டு சிடியால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படக் கூடும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பென்சில்' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் 2 வது நாளே இப்படத்துக்கு திருட்டி சிடி வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பென்சில்
ஜி.வி.பிரகாஷின் அறிமுகப்படமான 'பென்சில்' நீண்ட 3 வருடங்கள் கழித்து ஒருவழியாக கடந்த வெள்ளியன்று வெளியானது. ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரசனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று வெளியான இப்படத்துக்கு மறுநாளே திருட்டு சிடி வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ்
பென்சில் படத்துக்கு திருட்டு சிடி வெளியானது குறித்துக் கேள்விப்பட்ட படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாருக்குப் பின் ஊடங்களுக்குப் பேட்டியளித்த ஜி.வி.பிரகாஷ் ''பென்சிலுக்கு திருட்டு சிடி 2 வது நாளே வெளியானது அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறோம்.

தியேட்டர்
கண்டிப்பாக தியேட்டர் வழிகாட்டுதல் இல்லாமல் இதனை செய்திருக்க முடியாது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். சமீபத்தில் 24 படத்திற்கும் இதேபோல திருட்டி சிடி வெளியானது. தொடர்ந்து இதுபோன்ற திருட்டு சிடிக்கள் வெளியாவதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

வெளிநாட்டு
வெளிநாட்டு உரிமை மூலமாக திருட்டு சிடி வெளியாகிறதா? என்பது தெரியவில்லை. ஒருவேளை கியூப் வசதியுடன் வெளிநாட்டு உரிமையைக் கொடுத்தால் இதுபோன்ற விஷயங்களைத் தடை செய்ய முடியும் என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் தேவை'' என்று கூறியிருக்கிறார். '24' திருட்டு சிடிக்கு உடந்தையாக இருந்தததாக பிவிஆர் தியேட்டர்களில் அப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











