பேரழகன் பட இயக்குநர், தேசிய விருது வென்ற சசி சங்கர் மரணம்!
நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற படத்தை இயக்கிய சசி சங்கர் இன்று கேரளாவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
சசி சங்கர் மலையாளத்தில் 10 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். 1993-ல் நரயம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அவர் இயக்கிய குஞ்ஞி கூனன் படத்தைத்தான் பின்னர் சூர்யா நடிப்பில் பேரழகன் என்ற பெயரில் ரீமேக் செய்து தமிழில் அறிமுகமானார் சசி சங்கர்.

தொடர்ந்து சர்க்கார் தாதா என்ற மலையாளப் படத்தையும் பகடை பகடை என்ற தமிழ்ப் படத்தையும் அவர் இயக்கினார்.
இப்போது மலையாளத்தில் மிஸ்டர் பட்லர் 2 படத்தை இயக்கி வந்தார்.
சர்க்கரை நோயாளியான சசி சங்கர், இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்ததைப் பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுவிடம் உதவியாளராக இருந்த சசி சங்கர், தனது முதல் படத்திலேயே பிராமணப் பெண் அரபி மொழி கற்றுத் தரும் கதையைத் தேர்வு செய்து இயக்கினார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
குஞ்ஞி கூனன் படத்தின் மூலம் திலீப் மலையாளத்தில் பெரிய நடிகராக உயர்ந்தார்.
மறைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











