அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் அவசியம்.. 'சிவா மனசுல புஷ்பா' பட இயக்குநர் வாராகி எக்ஸ்க்ளூசிவ்: வீடியோ
அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை பேசும் படம்தான் 'சிவா மனசுல புஷ்பா' என அதன் இயக்குநர் வாராகி ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: அரசியல்வாதிகள் ஒழுக்கத்துடன் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்வதுதான் 'சிவா மனசுல புஷ்பா' திரைப்படம் என அப்படத்தின் இயக்குநர் வாராகி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.
'சிவா மனசுல புஷ்பா' திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒன் இந்தியாவுக்கு அதன் இயக்குநர் வராகி அளித்த சிறப்புப் பேட்டி....
சிவா மனசுல புஷ்பா ஒரு அரசியல் படம் மட்டுமில்லாது ஒரு குடும்பத்தின் தலைவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் படம். தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை கருவாக்கி எடுக்கப்பட்டதுதான் இப்படம். இப்படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கக் கூடிய வகையில் அது இருக்கும்.
இந்தப் படத்தில் சிவா கதாப்பாத்திரத்தில் நானும் புஷ்பா கதாப்பாத்திரத்தில் ஷிவானியும் நடிக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த நதியா ஶ்ரீ என்பவரும் நடிக்கிறார். இந்தப்படம் கண்டிப்பாக சர்ச்சையை உருவாக்கும். காரணம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளைக் கூறியுள்ளோம். என்ன சர்ச்சைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வேன். சிவா மனசுல புஷ்பா ஒரு வெற்றிப் படமாக அமையும்.

ஹீரோஸ் நடிக்க மறுத்துவிட்டார்கள்
இந்தப் படத்தில் நடிக்க கதாநாயகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பெரும்பாலான கதாநாயகர்கள் சினிமாவில் பேசும் வசனங்களை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை. நிஜ வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியாத விஷயங்களை சினிமாவில் ஹீரோ செய்கிறார் என்பதால் தான் அவர்களை மக்களுக்குப் பிடிக்கிறது. அதனால் தான் அவருகளுக்கு ரசிகர் மன்றம் அமைகிறது.

நல்ல இயக்குநர் என மக்கள் சொல்வாங்க
ஹீரோக்கள் மறுத்த காரணத்தாலும் இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்க பயந்ததாலும் நானே இயக்கி, நடிக்கலாம் என முடிவுக்கு வந்தேன். இந்தப் படத்தை இயக்கக் காரணம், நான் 20 வருடங்களாக பத்திரிகை தொழிலில் இருந்தாலும் சினிமாவிலும் இருந்துள்ளேன். அந்த நம்பிக்கையில் இப்படத்தை இயக்குகிறேன். நல்ல இயக்குநர் என மக்களிடமும் பெயர் வாங்குவேன்.

தனிப்பட்ட அரசியல்வாதிய தாக்கல
இது யாரோ ஒரு தனிப்பட்ட அரசியல்வாதியை குறிவைத்து எடுக்கப்பட்ட படமல்ல. சமீபகாலமாக அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாளிகளாகத்தான் நினைத்து வருகிறார்கள். நம் முன்னோர் தலைவர்களான பெரியார், காமராசர், கக்கன், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியம்
ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் தன்னுடைய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே ஒழிய, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவதில்லை. இந்தக் கருத்து மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதால்தான் இப்படத்தை எடுத்துள்ளோம். குறிப்பாக ஒரு அரசியல்வாதிக்கு ஒழுக்கம் மிக முக்கியம். ஒழுக்கமே இல்லாத அரசியல்வாதிகளை எப்படி மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், அதனால் ஏற்படும் விளவுகள் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே இக்கதையின் நோக்கம்.

என்ன சர்ச்சை வந்தாலும் படம் வரும்
நான் சினிமாவுக்கு 15 வருடங்களுக்கு முன்பு வந்தபோது மறைந்த அமைச்சர் கக்கனின் வாழ்கையை திரைப்படமாக்கினேன். ஆனால் பல்வேறு அரசியல் அழுத்தங்களால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு என்ன சர்ச்சை வந்தாலும் இப்படம் கண்டிப்பாக வெளிவரும். இது அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் படமாக இருக்கும் - இவ்வாறு இயக்குநர் வாராகி கூறினார்.


Click it and Unblock the Notifications











