என் அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்.. தவறான தகவலை பரப்பாதீங்க.. நடிகை மீனா வேண்டுகோள்!
சென்னை: நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 29ம் தேதி மாலை 7 மணியளவில் காலமானார்.
Recommended Video
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த துக்க செய்தியை கேட்டு தென்னிந்திய திரையுலகமே மீளாத் துயரில் ஆழ்ந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி கூறியு மீனா, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

நுரையீரல் பாதிப்பு
சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மீனாவின் கணவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 29ம் தேதி மாலை 7 மணியளவில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு வயது வெறும் 48 தான்.

ரஜினி முதல் குஷ்பு வரை
ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக இருந்த காலம் தொட்டு ஹீரோயினாகவும், சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் அன்புள்ள ரஜினிகாந்த் முதல் அண்ணாத்த வரை மீனாவின் பயணம் மிகவும் பெரியது. போனில் முதலில் அழைத்து விசாரித்த ரஜினிகாந்த் துக்கம் தாளாமல் நேரடியாகவே மீனாவை சந்தித்து அவரது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பழம்பெரும் நடிகை லக்ஷ்மி, நடிகை ரம்பா, மன்சூர் அலி கான், ரமேஷ் கண்ணா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தவறான தகவலை பரப்பாதீங்க
என் அன்பான கணவர் வித்யாசாகரை இழந்து மிகவும் வாடுகிறேன். இந்த தருணத்தில் தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என நடிகை மீனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என பலரும் வதந்திகளை கிளப்பியதற்கு முன்னதாக நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், பல யூடியூப்களில் வித விதமான கதைகளை கட்டி வரும் நிலையில், இப்படியொரு கோரிக்கையை வைத்துள்ளார் மீனா.

துக்கத்திலும் நன்றி
அதுமட்டுமின்றி, அந்த போஸ்ட்டில், என் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. முதலமைச்சர் மற்றும் மருத்துவ குழுவினர் கடைசி வரை செய்த அத்தனை முயற்சிகளுக்கும் உதவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கடைசி வரை சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்ததற்கும் அவரது மருத்துவக் குழுவினருக்கும் என் நன்றி எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











